ஆனந்தி கோபால் ஜோஷி

0
265

1. மராட்டிய மாநிலத்தில் மார்ச் 31ம் தேதி, 1865-ல் பிறந்தார். இவருக்கு 9 வயதாக இருந்தபோது இவரை விட 20 வயது மூத்தவரான கோபால் ஜோஷி என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
2. கோபால் ஜோஷி தனது மனைவியின் பெயரை ஆனந்தி என்று மாற்றினார். மேலும் தன் மனைவியை கல்வி கற்கும்படியும் ஆர்வமூட்டினார். ஆனந்தி ஆங்கிலம் மற்றும் பிற கல்வியையும் ஆர்வமுடன் கற்றுக்கொண்டார்.
3. 14 வயதாக இருந்தபோது ஆனந்தி ஆண் குழந்தை ஒன்றை பெற்றார். அந்தக்குழந்தை போதிய மருத்துவ வசதி இல்லாத காரணத்தால் பிறந்த 10 நாட்களில் மரணம் அடைந்து விட்டது. மேலும் அப்போது ஆனந்திக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
4. அந்தக் காலத்தில் பெண் மருத்துவர்கள் என்று யாருமே இல்லை.எனவே மருத்துவம் படித்து தான் ஒரு சிறந்த மருத்துவராக வேண்டும் என்று ஆனந்தி விரும்பினார். இதற்கு அவரது கணவரும் ஆதரவு அளித்தார்.
5. ஆனால் அந்தக்காலத்தில் குடும்பக்கட்டுப்பாடு, சமூக கட்டுப்பாடுகள் நிறைய இருந்தன. பெண்கள் கல்வி கற்கும் வாய்ப்பு அதிகமாக இல்லாமல் இருந்தது. அதுபோன்ற நிலையில் ஒரு பெண் வெளிநாடு சென்று மருத்துவம் படிப்பது என்பது மிகவும் சவாலான காரியமாக இருந்தது.
6. இருப்பினும் கணவரின் உதவியுடன் அத்தனை தடைகளையும் அவர் தாண்டினார். இதையடுத்து 1883-ம் ஆண்டு ஆனந்தி தனியாக அமெரிக்கா செனறு, பெண்கள் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தார். ஆனந்திபாய் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த போது அவருக்கு வயது 19. அமெரிக்காவின் கடுங்குளிரும், பழக்கமில்லாத உணவு வகைகளும் அவரது உடல்நலத்தை மிகவும் பாதித்தன. காச நோய் அவரைத்தாக்கியது. இது போன்ற பல்வேறு தடைகளையும், துன்பங்களையும் தாண்டி அவர் 1886-ம் ஆண்டு மருத்துவப்பட்டம் பெற்றார்.
7. 1886 இறுதியில் ஆனந்திபாய் இந்தியா திரும்பினார். கோலாப்பூர் சமஸ்தானத்தில் உள்ள மருத்துவமனையில் பெண்கள் மருத்துவப்பிரிவின் பொறுப்பு மருத்துவராக அவர் நியமிக்கப்பட்டார். ஆனால் அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமானது. அவரைத்தாக்கிய காச நோய் முற்றியதால் 1887-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந் தேதி மரணம் அடைந்தார்.
8. மரணம் அடைந்த போது ஆனந்தியின் வயது 22 தான். மரணப்படுக்கையில் இருந்தபோது ‘என்னால் முடிந்த அளவு நான் செய்துவிட்டேன்’ என்று ஆனந்தி கடைசியாக கூறினார்.
9. இந்தியாவிலும் பெண்களுக்கென்று தனி மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும் என்பது அவரது பெரும் கனவு. 19 -வது நூற்றாண்டிலே புரட்சி பெண்ணாக வாழ்ந்த இவர் வாழ்க்கை போராட்டங்கள் இன்றைய பெண்கள் கல்விக்கு ஆனந்தி தொடக்க புள்ளியாக இருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here