எலியும் ஜாடியும்

0
304

ஒரு ஜாடி முழுவதும் தானியம் நிரப்பி, அதன் மேல் ஒரு எலியை விட்டார்கள். எலிக்கு தன்னை சுற்றி இவ்வளவு உணவு இருக்கிறது என்று பயங்கர குஷி. இனி உணவை தேடி ஓடாமல் சந்தோஷமாய் வாழ்க்கையை கழிக்கலாம் என்று எண்ணி தினமும் தன்னை சுற்றியிருந்த தானியத்தை உண்டது. நாளாக நாளாக,ஜாடியில் உள்ள தானியம் குறைந்து கொண்டேபோய் ஒரு நாள் தீர்ந்தே விட்டது. எலி இப்பொழுது ஜாடிக்குள் நிரந்தரமாய் மாட்டிக்கொண்டு விட்டது. அதனால் வெளியேறவே முடியவில்லை.

இனி தினமும் யாராவது  தானியம் போட்டால் மட்டுமே அதற்கு உணவு. யாரும் போடவில்லை என்றால் பட்டினி கிடந்து சாக வேண்டியதுதான். அப்படியே யாரவது போட்டாலும் அவர்கள் போடுவதை மட்டுமே சாப்பிட முடியும். விரும்பியதை விரும்பிய அளவு சாப்பிட முடியாது.

இந்த கதையில் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டிய பாடங்கள்: (1) குறுகிய கால இன்பங்கள் என்றும் நிரந்தரம் அல்ல. அவை நம்மை அழிவுப் பாதைக்கே கொண்டு செல்லும். அவை நீண்ட கால பொறிகளுக்கு வழிவகுத்து நம்மை நிரந்தரமாக சிக்க வைத்து விடும். (2) சுலபமாக கிடைக்கும் எதுவும் நம்மை அதற்கு அடிமையாக்கி, அதற்கு சொகுசாய் நம்மை வாழ பழக்கி, நம் முன்னேற்றத்தை தடுத்து நம் வாழ்வை நாசமாக்கி விடும். (3) நமக்கு தெரிந்த ஒரு கலையை நாம் உபயோகிக்காமல் சோம்பேறியானால், அந்த கலையை நாம் இழக்க நேரிடும். (4) சரியான நேரத்தில் சரியான செயல்களை செய்யாமல் விட்டால், நம் வாழ்க்கையையே இழக்க நேரிடும். நாம் நம் மனதுக்கு பிடித்ததை தேர்ந்தெடுக்க முடியாத நிலைக்கு கட்டாயமாக தள்ளப்படுவோம்.

மற்றபடி தமிழகத்தில் நடைபெறும் திராவிட அரசியலுக்கும் இந்த கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here