காசியில் நடப்பதுதான் காஞ்சியில் நடக்கிறது

0
118

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்று வரும்
காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் ஒருபகுதியாக பனாரஸ் ஹிந்து
பல்கலைக் கழகத்தில் கோயில்களின் கட்டிடக்கலை குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “தமிழ் மொழியின் பெருமையை நன்கு உணர்ந்துள்ள பிரதமர் நரேந்திரமோடி, உன்னதமான தமிழ் மொழியை கௌரவிக்கும் வகையில், உலக அரங்குகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும், திருக்குறள், சங்க தமிழ் இலக்கியங்களில் இருந்து மேற்கோள்காட்டி பேசி வருகிறார். காசிக்கும், தமிழகத்துக்கும் இடையேயான புராதனமான தொடர்பை எடுத்துக்கூறி, ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற பிரதமரின் முழக்கத்தை நனவாக்குவதே காசி தமிழ் சங்கமத்தின் தலையாய நோக்கம். நாம் பல மொழி பேசலாம். பண்பாடுகள் வேறாக இருக்கலாம். எனினும், நாம் அனைவரும் பாரதத்தாயின் மக்களே என்பதை வலியுறுத்தவே நமது பிரதமர் ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற சொற்றொடரை முன்வைத்தார். நம்மை பிரிப்பதற்காக கூறப்படும் வேறுபாடுகள் இடைக்கால சொருகல்களே. அதில் உண்மை இல்லை. இதை இன்றும் அரசியலில் சிலர் பயன்படுத்திவருவதை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும், சரியான உண்மைகளை ஆதாரங்களுடன் எடுத்துச்சொல்ல வேண்டும். காஞ்சியும் காசியும் நீண்ட காலமாக எப்படி தொடர்புகளை வளர்த்தார்கள் என்பதை ‘காசியில் நடப்பதுதான் காஞ்சியில் நடக்கிறது’ என்ற சொற்றொடர் மூலமாக உணர முடிகிறது. இரண்டு உயர் கல்வி மையங்களாக காஞ்சியும், காசியும் அப்போதே இருந்துள்ளன. காசியில் இன்றும் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. குமரகுருபரர் இங்கு வந்து கோயிலை கட்டிவிட்டு, பின்னர் அங்கு சென்று தருமபுரம் ஆதீனத்தை நிறுவினார். இன்றைக்கு, சிலர் ஹிந்தி திணிப்பு என விதண்டாவாதம் பேசுகின்றனர்.
அரசியல் காரணங்களுக்காக நமது பழம்பெரும் கலாசாரத்தை மறந்து விடுவதா, அல்லது அதை ஒரு பக்கம் ஒதுக்கிவைப்பதா என்று பார்க்கும்போது, இந்த தமிழ் சங்கமத்தின் முக்கியத்துவம் நமக்கு புரியும். நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக, நாம் அனைவரும் ஒன்றாக இருந்தால் இந்த நாடு முன்னேறும், ஏழ்மை தானாக அகலும் என்ற நமது பிரதமரின் கனவை நனவாக்க பாடுபடுவதுடன், உண்மைகளை எடுத்து வைக்கவேண்டும்” என பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here