ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வு: வாரணாசி நீதிமன்றம் அனுமதி!

0
134

 

ஞானவாபி மசூதியில் சீல் வைக்கப்பட்ட இடத்தைத் தவிர்த்து மற்ற இடங்களில் தொல்லியல் ஆய்வு நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது

ஞானவாபி மசூதி வளாகத்தில், இந்திய தொல்லியல் துறையின், அறிவியல்பூர்வ ஆய்வுக்கு வாரணாசி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு முன்னர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் எடுக்கப்பட்ட வீடியோ ஆய்வின்போது, மசூதி வளாகத்தில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் இடத்திற்கு சீல் வைக்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. அதன்படி, சீல் வைக்கப்பட்ட இடத்தை தவிர மற்ற இடங்களில் அறிவியல்பூர்வ ஆய்வு நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

 

உத்தரப்பிரதேசம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தின் சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து பெண்கள் 5 பேர், வாரணாசி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய கடந்த ஆண்டு மே மாதம் உத்தரவிட்டது. தொடர்ந்து, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிமன்ற ஆணையர் அஜய் மிஸ்ரா தலைமையிலான குழு மசூதி வளாகத்தில் 3 நாட்கள் கள ஆய்வு மேற்கொண்டது. அப்போது, மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஞானவாபி மசூதி அமைந்துள்ள பகுதிக்குள் நுழைவதற்கு வாரணாசி நீதிமன்றம் தடை விதித்தது.

 

இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் அஞ்சுமன் இன்டெஜாமியா மசாஜித் கமிட்டி வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஞானவாபி மசூதியில் இஸ்லாமியர்கள் வழிபாடு நடத்த எந்த தடையும் இல்லை என்றும், ஞானவாபி மசூதி அமைந்துள்ள பகுதியில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியும் உத்தரவிட்டது.

 

அதேசமயம், இது தொடர்பான வழக்குகள் விசாரணையின் போது, சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் இடத்திற்கு சீல் வைக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர், அந்த உத்தரவானது நீட்டிக்கப்பட்டது.

 

மணிப்பூரில் மட்டுமா பெண்களுக்கு எதிராக வன்முறை; இதோ மேற்குவங்கத்தில் கதறி அழுத பெண் எம்பி; ஏன்? எதற்காக?

 

இந்த நிலையில், ஞானவாபி மசூதியில் சீல் வைக்கப்பட்ட இடத்தைத் தவிர்த்து மற்ற இடங்களில் தொல்லியல் ஆய்வு நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்திய தொல்லியல் துறை, அறிவியல்பூர்வ ஆய்வு நடத்தி ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

 

காசி விஸ்வநாதர் கோயிலுக்குப் பக்கத்தில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியில் பழங்கால இந்துக் கோயில் இருந்ததற்கான அடையாளங்கள் இருப்பதாகக் கூறி, கடந்த மே மாதம் நான்கு பெண்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த மனுவில், “குறிப்பிட்ட இடத்தில் ஸ்வயம்பு ஜோதிர்லிங்கம் லட்சக்கணக்கான ஆண்டுகளாக இருந்ததாகவும், கி.பி. 1017 இல் முகமதி கஜினியின் தாக்குதலிலிருந்து தொடங்கி, சிலை வழிபாட்டாளர்கள் மீது வெறுப்பு கொண்டிருந்த முஸ்லிம் படையெடுப்பாளர்களால் அது சேதமடைந்தது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த வழக்கில்தான், ஞானவாபி மசூதியில் சீல் வைக்கப்பட்ட இடத்தைத் தவிர்த்து மற்ற இடங்களில் தொல்லியல் ஆய்வு நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், தொல்லியல் ஆய்வு மசூதி வளாகத்தை சேதப்படுத்தும் என்று மசூதி கமிட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எனவே, வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here