ஒசூரில் இந்து எழுச்சிக்கு வித்திட்ட ஸ்ரீ வீரபாகுஜி

0
129

1981ல் பெங்களூரில் ஒரு ஆர்.எஸ்.எஸ். பைட்டக் ஒன்று நடைபெற்றது. அந்த பைட்டக்கிறகு கர்நாடகாவிலுள்ள எல்லா தாலுகாவிலிருந்தும் ஸ்வயம்சேவகர்களை அழைத்து வரவேண்டும் என்று முடிவு செய்து எல்லோரும் தீவிரமாக பணியாற்றினார்கள்.

குறிப்பிட்ட தேதியில் பைட்டக் நடக்கும்போது. எல்லா தாலுக்காவிலிருந்தும் ஸ்வயம்சேவகர்கள் வந்து இருக்கிறார்களா என்று பார்க்கும் போது, இரண்டு தாலுக்காவிலிருந்து வரவில்லை என்று தெரிந்தது.

ஒன்று ஒசூர், மற்றொன்று தேன்கனிக்கோட்டை எனப்படும் டெங்கனிக்கோட்டை. அப்போது இந்த இரண்டு பகுதிகளும் முழுமையாக தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசக்கூடிய பகுதிகளாக இருந்ததால், சங்க கண்ணோட்டத்தில் கர்நாடகா மாநிலத்துடன் இணைக்கப்பட்டு இருந்தது.

தளி பகுதியைத் தவிர வேறு எங்கும் ஷாகா இல்லை. தற்போது திருச்சி கார்யாலயத்தில் பிரச்சாரக்காக இருக்கும் ஸ்ரீகாந்த்தின் தந்தை ஸ்ரீ சீதாராமன்ஜி தளி பகுதியில் ஷாகா நடத்திக் கொண்டிருந்தார். ஸ்ரீ ஹொ.வே. சேஷாத்ரிஜி, ஸ்ரீ கிருஷ்ணப்பாஜி போன்றவர்கள் தளி பகுதிக்கு அப்போது பிரவாஸ் செய்திருக்கிறார்கள்.

பிறகு அரசாங்க கணக்குப்படி பகுதிகள் பிரிக்கப்பட்ட போது, மேற்கண்ட இரண்டு பகுதிகளும் தமிழகத்துடன் இணைக்கப்பட்டன. அதன் பிறகு ஒசூரில் சங்க பணி துவக்குவதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. 1985ல் ஸ்ரீ. A.செந்தில்குமார்ஜி (தற்போதைய க்ஷேத்ர பிரச்சாரக்) ஒசூர் தாலுக்கா பிரச்சாரக் ஆக வந்தார். ஊரில் சில பெரியவர்களும், சில பள்ளி ஆசிரியர்களும் அவரின் தொடர்புக்கு வந்தனர்.

அவர்களில் நான்கு பள்ளி ஆசிரியர்கள் முக்கியமானவர்கள். ஸ்ரீ ஜெகனாதன்ஜி, ஸ்ரீ அன்னையப்பாஜி, அத்திமுகம் ஸ்ரீ விஸ்வநாதன்ஜி, ஸ்ரீ சத்தியநாராயணன்ஜி.

செந்தில்ஜி மூலம் சங்கத்தைப் பற்றி அறிந்துக் கொண்ட அவர்களுக்கு சங்கத்தின் முக்கியத்துவம் புரிந்தது. அதன் பிறகு சங்கத்தை எல்லா இடங்களிலும் கொண்டு செல்ல தீவிர முயற்சி எடுத்தனர். ஒசூர் மற்றும் சுற்றுப்புறத்தில் எங்கு சங்க நிகழ்ச்சி, வர்க நடைபெற்றாலும் மாணவர்களை அனுப்பி வைப்பார்கள். இவர்களுக்கு அந்த பகுதிகளில் இருந்த மரியாதை காரணமாக பெற்றோர்களும் தங்கள் மகன்களை விருப்பத்துடன் முகாம், நிகழ்ச்சிகளுக்கு அனுப்பி வைப்பார்கள். அதன் மூலம் ஒசூர் மற்றும் சுற்றுப்புற ஊர்களில் சங்கம் மிக வேகமாக வளர்ந்தது. பல ஊர்களில் ஷாகா துவக்கப்பட்டன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் 1989ஆம் ஆண்டு நாடு முழுவதும் அயோத்தி ஸ்ரீ ராம ஜென்மபூமியில் பிரதிஷ்டை செய்வதற்காக ராம சிலா நிகழ்ச்சி நடைபெற்றது. ஒசூரிலும் அதை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.

தமிழகத்தின் திராவிட சிந்தனை, கடவுள் எதிர்ப்பு போன்ற விஷமங்கள் அங்கு நுழையாமல் இருந்த காலக்கட்டம் அது. மக்கள் ஆன்மிக சிந்தனையுடன் இருந்தனர். எல்லா ஊர்களிலும் இருக்கும் ராமர் கோயிலில் வாரந்தோறும் பஜனை நடைபெற்று வந்தன. ராமர் மீது அளவற்ற பக்தியுடன் அவர்கள் வாழ்ந்து வந்தனர்.

ஒசூரிலுள்ள ஸ்ரீ நாராயண தாதா ஆஸ்ரமம். அதற்கு நூற்றுக்கணக்கான கிராமங்களில் பக்தர்கள் உண்டு, அப்போதைய அதன் துறவி ஸ்ரீ வெங்கடேச மாஸ்டர் ஸ்ரீ ராம சிலா நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த விரும்பினார். அவருக்கு தொடர்பில் இருந்த கிராமங்களுக்கு ராம சிலா கற்கள் கொடுக்கப்பட்டன.

பூஜிக்கப்பட்ட கற்களை சேகரிக்க நான்கு விதமான ரதங்கள் பாரதத்தில் வலம் வந்தன. ஒசூருக்கு ஜாம்பவான் ரதம் வருகை தந்தது. தமிழகத்திலேயே மிகவும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது என்றால் அது ஒசூரில்தான் என்று சொல்ல வேண்டும். நுற்றுக்கணக்கான டிராக்டரில் பூஜிக்கப்பட்ட கற்களை மக்கள் பயபக்தியோடு கொண்டு வந்து அளித்தனர். அன்று ஒசூர் நகரமே ஸ்தம்பித்து போயின. இவ்வளவு ஆதரவு இருக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இது சில அரசியல்வாதிகளுக்கு பீதியை உண்டாக்கியது. ஆரம்பத்திலேயே இதை கிள்ளியெறிய வேண்டும் என்று சதித்திட்டம் தீட்டினர்.

அதற்கு வாய்ப்பாக அமைந்தது உடனடியாக வந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலம். அமைதியாக சென்று கொண்டிருந்த ஊர்வலத்தில் சில விஷமிகள் உள்ளே நுழைந்து அருகில் இருந்த மசூதி மீது வெடிகளை வெடித்து கலாட்டா செய்தனர்.

ஏற்கனவே தயாராக காத்துக் கொண்டிருந்த காவல்துறை அப்பாவி மக்கள் மீது தடியடி நடத்தியது. கலாட்டகளுக்கு சம்பந்தமில்லாத ஸ்ரீ செந்தில் குமார்ஜி கைது செய்யப்பட்டார். கார்யாலயத்திற்குள் புகுந்த காவல்துறையினர் அதனை துவம்சம் செய்தனர்.

இதனைக் கண்டித்து ஒருகண்டனக் கூட்டம் நடத்த வேண்டும் என்று சேலம் விபாக் பிரச்சாரக் ஆக இருந்த ஸ்ரீ வீரபாகுஜி முடிவு செய்தார். அப்போது ஒசூரில் சங்கத்தை தவிர பாரதிய ஜனதா கட்சி மட்டுமே இருந்தது. அதுவும் அப்போதுதான் துளிர் விட்டு இருந்தது. பாஜக பெயரில் கண்டனக் கூட்டத்தை நடத்த ஸ்ரீ வீரபாகுஜி விரும்பினார். மிகவும் கடுமையான முயற்சி எடுத்தார். சுமார் ஒரு மாதம் கழித்து தான் காவல்துறை அனுமதி அளித்தது.

பொதுக் கூட்டத்திற்கு முன், தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திரு அலாவுதீன், எஸ்.பி. திரு காந்திராஜன் ஆகியோர் அரசியல்வாதிகள், உள்ளூர் முக்கியஸ்தர்கள் அழைத்து ஒரு அமைதி கூட்டத்தை கூட்டினர். பாஜக, இந்து இயக்கங்களை அழைக்கவில்லை. கூட்டம் நடைபெற இருக்கிறது என்பதை அறிந்த ஸ்ரீ வீரபாகுஜி அந்த கூட்டத்தில் அழைப்பு இல்லாமலேயே கலந்துக் கொண்டார்.

அமைதிக் கூட்டத்தில் ஆட்சியர் பேசும் போது, ”இந்த ஊர்களில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு வெளியூர் நபர்களை அனுமதிக்காதீர்கள். இந்த கூட்டத்திற்கு வந்திருக்கும் வெளியூர் நபர்கள் உடனே வெளியேற வேண்டும்” என்றார். அதைக் கேட்ட ஸ்ரீ வீரபாகுஜி, “நீங்களும் வெளியூர்காரர்தானே. அப்போது நீங்களும் வெளியேறுங்கள்” என்று காட்டமாக பதில் அளித்தார். அதற்கு ஆட்சியர், “நான் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டவன். எனக்கு எல்லா அதிகாரங்களும் உண்டு” என்றார். உடனடியாக ஸ்ரீ வீரபாகுஜி, “நான் ஆர்.எஸ்.எஸ்ஸால் நியமிக்கப்பட்டவன். இந்துக்களுக்கு பிரச்சனை என்று வந்தால் அதை தட்டி கேட்க எனக்கும் எல்லா அதிகாரமும் இருக்கிறது” என்றார். அதன் பிறகு ஆட்சியர் வாய் திறக்கவில்லை.

கூட்டத்தை ஒசூர் மையத்திலுள்ள போஸ் பஜாரில் நடத்த காவல்துறை அனுமதி கொடுத்தது. அனுமதி கொடுத்துவிட்டு பல தடைகளையும், தொந்தவுகளையும் கொடுத்தது. கூட்டத்திற்கு அதிக கூட்டம் சேராமல் இருக்க காவல்துறை பல முயற்சிகளை எடுத்தது. கிராமங்களிலிருந்து கூட்டம் வராமல் தடுப்பதற்காக மதியத்திற்கு மேல் நகர பேருந்துக்களை நிறுத்தினர். தேவையில்லாமல் சந்தைப்பகுதியில் தடியடி நடத்தி மக்கள் மனதில் ஒரு பீதியை உண்டாக்கினர்.

கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவந்த வேலையில், ஒரு கும்பல் கூட்டத்தை கலைக்கும் நோக்கத்தில் ஆவேசமாக வந்தது. அவர்கள் ஸ்ரீ வீரபாகுஜியை சுற்றி நின்று மிகவும் கடுமையாக வாக்குவாதம் செய்தனர். அவர்களது திட்டம் ஸ்ரீ வீரபாகுஜியை மிரட்டி, கூட்டத்தை தடுக்க வேண்டும் என்பதுதான். ஆனால் ஸ்ரீ வீரபாகுஜி தன்னுடைய மீசையை முறுக்கி, அவரும் அவர்களுக்கு இணையாக கடுமையாக வாக்குவாதம் செய்தார். அதைக் கண்ட அவர்கள் பயந்து பின்வாங்கினர்.

எல்லா தடைகளையும் மீறி ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர். பல கிராமங்களிலிருந்து டிராக்டர் எடுத்துக் கொண்டு மக்கள் போராட்டத்தில் குதித்தனர். திரும்பிய பக்கமெங்கும் மக்கள் கூட்டம்தான்.

கண்டனக் கூட்டத்தில் ஸ்ரீ வீரபாகுஜியுடன், ஸ்ரீ ஆர்.பி.வி.எஸ். மணியன், தளி தொகுதி பாஜக வேட்பாளராக பின் அறிவிக்கப்பட்ட ஸ்ரீ ரங்காரெட்டி ஆகியோர் பேசினார்கள். ஸ்ரீ ஆர்.பி.வி.எஸ். மணியன் அவர்களின் ஆவேசமான பேச்சு மக்களின் மனங்களை கொதிக்க வைத்தது.

மாவட்ட ஆட்சியர் திரு அலாவுதீன், மாவட்ட கண்காணிப்பாளர் திரு. காந்திராஜன் கூட்டத்தின் ஒர் ஓரத்தில் நின்று அனைவருடைய பேச்சுக்களையும், மக்களின் ஆவேசத்தையும் பார்த்து கொண்டிருந்தனர். அவர்களின் கோபம் உச்சக்கட்டத்திற்கு சென்றனர். இந்த எழுச்சியை முளையிலேயே கிள்ளி எறி திட்டமிட்டனர். அவர்களது சதித்திட்டத்திற்கு ஆதரவாக அப்போது தமிழகத்தில் கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி இருந்தது.

ராம சிலா நிகழ்ச்சிக்கு பிறகு நாடு முழுவதும் ஸ்ரீ ராம ஜோதி யாத்திரை நடைபெற்றது. ஒசூருக்கும் அந்த ரதம் வந்தது. ஒசூரில் அமைதியாக நடைபெற்ற ராம ஜோதி ரதம், தேன்கனிக்கோட்டைக்கு 10.10.1991 அன்று சென்றது. அங்கு ஸ்ரீ ஆர்.பி.வி.எஸ். மணியன்ஜி சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு இருந்தார்.

ஒரு குறிப்பிட்ட தெரு வழியாக ஊர்வலம் செல்லக் கூடாது என்று காவல்துறை தடை விதித்தது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் காவல்துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கும் போதே, காவல்துறையினர் தடியடி பிரயோகம் செய்தனர். அடுத்த சில நொடிகளில் துப்பாக்கி சூடும் நடைபெற்றது.

ஸ்ரீ ஆர்.பி.வி.எஸ். மணியன்ஜி மீது கடுமையாக தடியடி தாக்குதல் நடத்தது. அவர் மண்டையிலிருந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக ஸ்வயம்சேவகர்கள் அவரை காப்பற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.

திடீரென துப்பாக்கி சூடு நடைபெற்றதால் ஸ்ரீ நரசிம்மன், ஸ்ரீ பாபு, ஸ்ரீ சங்கர், ஸ்ரீ ராஜா ஆகிய நான்கு அப்பாவி இந்துக்கள் தலை, நெஞ்சு, வயிற்றுப் பகுதியில் குண்டு பாய்ந்து பலியாகினர். அவர்களுடைய உறவினர்களுக்கு கூட சொல்லாமல் உடலை ஒசூரில் அடக்கம் செய்யப்பட்டது.

ஸ்ரீ ஆர்.பி.வி.எஸ். மணியன்ஜி, அப்போதைய தர்மபுரி ஜில்லா பிரச்சாரக் ஸ்ரீ சுந்தர்ராஜன்ஜி (தற்போது நியூரோ தெரபி மருத்துவர்), ஸ்ரீ ஆறுமுகம் (தற்போது தக்ஷிண் தமிழ்நாடு பிராந்த பிரச்சாரக்) பள்ளி மாணவர் ஸ்ரீ A.N. அசோக் (தற்போது கீரிடா பாரதி க்ஷேத்ர பொறுப்பாளர்) ஸ்ரீ ரங்கநாத் மற்றும் பலர் கைது செய்யப்பட்டனர்.

இதை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட சேலத்திலிருந்து ஸ்ரீ வீரபாகுஜி ஓசூர் வந்தார். அவருடன் காலம் சென்ற ஸ்ரீ ரமேஷ்ஜி, K.N. லெட்சுமணன்ஜி, A.K. பழனிசாமிஜி, சிங்கமெத்தை ஸ்ரீ கோபிஜி, ஈரோடு ஸ்ரீ இளங்காந்தி ஆகியோரும் வந்தனர். சென்னையிலிருந்து ஸ்ரீ வேதாந்தம்ஜி, ஸ்ரீ மெய்யப்பன்ஜி ஆகியோரும் வந்தனர். தேன்கனிக்கோட்டையிலிருந்து ஸ்ரீ முரளி வந்திருந்தார். இவர்களுடன் முதல்நாள்தான் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த ஸ்ரீ செந்தில்குமார்ஜி, ஒசூர் K.S. நரேந்திரன்ஜி மற்றும் பலர், ஒசூரில் முகாமிட்டு இருந்த ஆட்சியரை பார்க்க சென்றனர்.

நீண்ட நேரம் காத்திருந்தும் மாவட்ட ஆட்சியர் இவர்களைப் பார்க்க அழைக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த ஸ்ரீ வீரபாகுஜி இன்னும் சற்று நேரத்தில் எங்களை பார்க்க அழைக்கவில்லையென்றால், வெளியேறி விடுவோம் என்று ஆவேசமாக கூறினார். சற்று நேரத்தில் சில காவல்துறை அதிகாரிகள் வந்து ”பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தாக நீங்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டீர்கள்” என்று கூறி கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஊரிலும், தொழில் ரீதியாகவும் மிகவும் முக்கியமானவர்கள். இந்த கலவரத்தில் சம்பந்தம் இல்லாதவர்கள். ஆனால் ஓசூரில் இதைப் போன்ற ஒரு துக்கக்கரமான சம்பவம் நடந்து விட்டதே என்ற சோகத்தில் அவர்கள் ஆட்சியரிடம் நீதி கேட்க சென்றனர். அது பொது அமைதிக்கு பங்கம் என்று காவல்துறை பொய் வழக்கு போட்டு அவர்களை சிறையில் அடைத்தது.

அவர்களுக்கு எளிதில் ஜாமீன் கிடைக்க காவல்துறை விடவில்லை. நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு, சுமார் 22 நாட்கள் கழித்து விழுப்புரத்தில் தங்கியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் கிடைத்தது. விழுப்புரத்தில் சுமார் 23 நாட்களுக்கு பிறகு அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் தளர்த்தப்பட்டது.

இது ஒசூர், தேன்கனிக்கோட்டை, தளி பகுதிகளில் இந்து எழுச்சி ஏற்பட காரணமாக அமைந்தது. பிறகு நடந்த தளி சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இதற்கு சூத்திரதாரியாக இருந்து செயல்பட்டவர் ஸ்ரீ வீரபாகுஜி.

வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்ததின் மூலம் அயோத்தி போராட்டத்திற்கு வழிகாட்டிய ஸ்ரீ வீரபாகுஜி, ஒசூரில் ராம கார்யம் மூலமாக இந்து எழுச்சிக்கு வித்திட்டார் என்றால் அது மிகையாகாது.

(1988 ஆண்டியிலிருந்து 1992ஆண்டு வரை நான் ஒசூரில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி கொண்டிருந்தேன். அப்போது நான் பார்த்த, கேட்ட சம்பவங்களின் தொகுப்பு இது)

– கா. சீனிவாசன்

Website: https://kasisrinivasan.blogspot.com/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here