நீட் தேர்வின் சட்ட வரலாறு…

1
5091

ஆக்கம்: ஸ்ரீநிவாச ராகவன் S
வழக்குரைஞர்
மதுரை

(கேள்வி பதில் வடிவில்)

நீட் தேர்வு எப்படி வந்தது?

நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்குமான சேர்க்கை விதிகளில் Medical Council of India (UPA/ காங்கிரஸ் அரசு காலத்தில்) ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தது. அது தான் நீட் (NEET) என்ற வகை நுழைவுத் தேர்வு.
(National Eligibility and Entrance Test)

யாருக்கெல்லாம் நீட் தேர்வு உண்டு?

2018 வரை பாராளுமன்றத்தின் தனிப்பட்ட சட்டத்தால் தனியாக அமைக்கப்பட்ட AIIMS மற்றும் JIPMER ஆகிய சில மருத்துவக் கல்லூரிகளைத் தவிர மற்ற எல்லா அரசு, தனியார், நிகர்நிலை பல்கலை, மற்றும் சிறுபான்மை மருத்துவக் கல்லூரிகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம். மேற்படி எய்ம்ஸ், ஜிப்மர் ஆகிய கல்லூரிகளும் ஆரம்பம் முதலே தனியான நுழைவுத் தேர்வுகள் மூலம் மட்டுமே மாணவர்களைச் சேர்க்கின்றன. அந்தத் தேர்வுகள் நீட் தேர்வை விடக் கடினமானவை என்பது வேறு விஷயம்.

நீட் தேர்வை எதிர்த்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதா?

ஆம். தமிழ்நாட்டில் Vellore ல் உள்ள CMC என்ற கிறித்தவ மருத்துவக் கல்லூரி தனக்கென்று தனி மருத்துவக் கல்லூரி அனுமதிக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்தி வந்தது. அக்கல்லூரி மேற்கண்ட புதிய நீட் தேர்வு விதிகளை ஆட்சேபித்து ரிட் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தது. அதே மாதிரி நாடு முழுவதிலும் நீட் தேர்வை எதிர்த்து பல்வேறு உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட எல்லா வழக்குகளையும் உச்ச நீதிமன்றம் தன்னிடம் மாற்றிக் கொண்டு அனைத்து வழக்குகளையும் கூட்டாக விசாரித்தது.

நீட் தேர்வை உச்சநீதி மன்றம் முதலில் ரத்து செய்ததா?

ஆம். இரு தரப்பிலும் வாதப் பிரதி வாதங்களைக் கேட்ட பிறகு அந்த வழக்குகளை உச்ச நீதி மன்றம் அனுமதித்து நீட் தேர்வு விதிகள் செல்லாது என தீர்ப்பளித்தது.

பிறகு எப்படி திரும்ப நீட் தேர்வு வந்தது?

அதன் பின்பு அந்தத் தீர்ப்பில் பல முக்கியமான பிரச்சினைகளும், முன் தீர்ப்புக்களும், சட்ட விதிகளும் பின்பற்றப்படவில்லை என்று சொல்லி Medical Council of India (UPA/ Congress அரசு காலத்தில்) ஒரு Review Petition- ஐ உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றத்தில் சீராய்விற்கு இடமுண்டு. அந்த சீராய்வு மனு பிற்பாடு ஐந்து நீதிபதிகள் அடங்கிய பேரமர்வுக்கு( Larger Bench) மாற்றப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட அந்த பேரமர்வு அதற்கு முந்தைய நீட் தேர்விற்கு எதிரான உச்ச நீதி மன்றத் தீர்ப்பை ரத்து செய்து விட்டது. ஆகையால் நீட்-டிற்கு தடையில்லாமல் போனது. நீட் தேர்வுக்கு எதிரான ரிட் மனுக்கள் எல்லாம் மீண்டும் restore செய்யப்பட்டு இன்னும் அவை யாவும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அதன் விளைவாக நீட் தேர்வுக்கான சட்ட விதிகள் restore ஆகி தற்போது நாடு முழுவதும் நடைமுறையில் உள்ளது. அந்த நீட் தேர்வுக்கான புதிய சட்ட விதிகளை உச்ச நீதிமன்றம் ஸ்டே செய்யவில்லை.

அந்தச் சீராய்வு மனுவை யார் தாக்கல் செய்தார்கள்?

நீட்-டிற்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு பரிசீலனை செய்யக் கோரி (மன்மோகன் சிங் / காங். தலைமையிலான UPA வின் மத்திய அரசு பதவியில் இருக்கும் போது) Medical Council of India அந்த சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது. அதை விசாரித்த ஐந்து நீதிபதிகள் கொண்ட பேரமர்வு , நீட் தேர்விற்கு எதிரான முந்தைய தீர்ப்பை ரத்து செய்தது. எனவே நீட் தேர்வு நடத்த தற்போது தடை ஏதும் இல்லை.

தான் பிறப்பித்த தீர்ப்பைத் தானே சீராய்வு செய்து ஒரு நீதிபதி செயல்படலாமா?

சட்டத்தில் இதற்கு தடையில்லை. இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் தான் எழுதிய தீர்ப்பை பம்பாய் உயர்நீதி மன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சீராய்வு செய்த வரலாறு உண்டு. சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர்கள் சிலர் தான் பரித்துரைத்து அமைக்கப்பட்ட பேரமர்வில் தானே அமர்ந்து தீர்ப்பு சொன்னது உண்டு. இந்திய சாட்சியச் சட்டத்தின் 65B சட்டப் பிரிவின் கீழான அர்ஜுன் பண்டிட் ராவ் வழக்கின் பேரமர்வில் இது கடந்த வருடம் நடந்தது. நீட் வழக்கின் சீராய்வில் மட்டும் இது நடந்ததாகச் சொல்வது சரியல்ல.

நீட் எப்படி நடைமுறைக்கு வந்தது?

உச்ச நீதிமன்றம் சீராய்வு மனுவை அனுமதித்ததால் மட்டும் நடுவண் அரசு நீட் தேர்வை உடனே நடைமுறைப் படுத்தவில்லை. ‘சங்கல்ப் டிரஸ்ட்’ என்ற ஒரு அமைப்பு தொடுத்த பொது நல வழக்கில் உச்ச நீதி மன்றம் இனிமேல் நீட் தேர்வின் அடிப்படையில் மட்டுமே மருத்துவ இளங்கலை மற்றும் முதுகலை படிப்புச் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

நீட் தேர்வுக்கான விதிகள் எந்தச் சட்டத்தில் உள்ளன?

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் மத்திய அரசு இந்திய மெடிக்கல் கவுன்சில் சட்டத்தில் 10-D என்ற புதிய சட்டப் பிரிவை 2016-இல் முதலில் அவசர சட்டத்தின் மூலமும் , பின்னர் நிரந்தர சட்டமாகவும் நிறை வேற்றியது. நீட் தேர்வுகள் தற்போது மேற்சொன்ன புதிய /திருத்தப்பட்ட சட்டப் பிரிவு 10-D-யின் அடிப்படையில் தான் நடைபெறுகிறது.

இந்த விஷயத்தில் தற்போதைய நடுவண் அரசு எந்த மாதிரியான நிலைப்பாட்டை எடுத்தது?

காங். அரசின் திட்டமான நீட் தேர்வின் அடிப்படையிலான மருத்துவக் கல்லூரி அனுமதி விதிகளை பாஜக அரசும் ஏற்றுக் கொண்டது. தில்லியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் நீட் தேர்வை ஆதரித்தது. உண்மையில் காங். மற்றும் பாஜக அரசுகளை விட நீட் தேர்வை இந்த அளவிற்கு சீராக முன்னெடுத்துச் சென்றது உச்ச நீதிமன்றம் தான். நடுவண் அரசு நீட் தேர்வைப் பொறுத்து வேறு எதுவும் செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதிக்கவும் இல்லை.

தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைத்ததா?

தற்காலிக Exemption கோரி 2016ல் தமிழக அரசு அவசரச் சட்டம் ஒன்றை இயற்றியது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 254ன் படி அதற்கு மத்திய அரசும் சம்மதம் தந்தது. ஆனால் ஒரு வருடம் மட்டுமே அதை அனுமதிக்க முடியும் என உச்ச நீதிமன்றம் திட்ட வட்டமாகச் சொல்லி விட்டது. திரும்பவும் 2017ம் ஆண்டு நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு ஒரு வருடம் மட்டும் exemption கோரி அதே சட்டப் பிரிவின் கீழ் தமிழக அரசு அவசரச் சட்டம் இயற்றிய போது அதை உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொள்ள மறுத்து விட்டது. அதனால் முதலில் அதற்கு சரியென்று சொன்ன பாஜக /மத்திய அரசும் கடைசி நேரத்தில் சம்மதம் தராமல் கைகளை விரித்து விட்டது. ஒரு வேளை அரசு அவசரச் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்திருந்தாலும் அதற்கு நடுவண் அரசு சம்மதம் அளித்திருந்தாலும் அது 2017ம் வருடத்திற்கு மட்டுமே தரப்பட்டிருக்கும். கடந்த வருடம் உச்ச நீதிமன்றம் அந்த அவசரச் சட்டத்தை stay செய்திருக்கவும் அல்லது அது சட்டமாக நிறை வேற்றப்பட்டிருந்தால் அதை ரத்து செய்திருக்கவும் வாய்ப்புக்கள் அதிகம் இருந்தன.

முதுகலை மருத்துவப் படிப்புக்கும் நீட் அவசியமா?

ஆம். சொல்லப் போனால் முதுகலைப் படிப்புக்கு நீட் தேர்வு இளங்கலைக்கு முன்பே தமிழகத்தில் வந்துவிட்டது.

தமிழ்நாட்டில் முதுகலை மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வுக்கு முன்பாக இருந்த நடைமுறை என்ன?

ஒருவர் இளங்கலை மருத்துவம் படித்து முடித்த ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு சிறப்பு மதிப்பெண் ( சீனியாரிட்டி மதிப்பெண்) தரப்படும். அவர் அரசுத் துறையில் வேலை பார்த்தாலும் சரி அல்லது தனியாரில் வேலை பார்த்தாலும் சரி, அந்த மதிப்பெண் அவருக்கு உண்டு. அதிகபட்சம் பத்து மதிப்பெண்கள் மட்டுமே தரப்படும். அவர் அரசு மருத்துவத்துறையில் பணிக்குச் சேர்ந்தால் (அது ஆரம்ப சுகாதார நிலையமோ, அரசு கல்லூரியோ, மருத்துவமனையோ) அரசுப் பணியில் சேர்ந்து மக்களுக்கு சேவை செய்த மருத்துவர்களுக்கு இந்த சீனியாரிட்டி மதிப்பெண்ணுடன் சேர்த்து வருடத்திற்கு கூடுதலாக ஒரு மதிப்பெண் கிடைக்கும். ஆக, ஒரு மருத்துவர் பணியில் சேர்ந்தால் வருடத்திற்கு இரண்டு மதிப்பெண் ( ஒரு சர்வீஸ் மதிப்பெண் + ஒரு சீனியாரிட்டி மதிப்பெண்) கிடைக்கும். இதற்கும் அதிகபட்சம் பத்து மதிப்பெண் தான்.

ராமநாதபுரம், திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற மிகவும் பின்தங்கிய மாவட்டங்களிலும், மலைவாழ் பிரதேசங்களிலும் பணி புரியும் மருத்துவர்களுக்கு ஒவ்வொரு வருடத்திற்கும் கூடுதலாக இரண்டு சர்வீஸ் மதிப்பெண்கள் கிடைக்கும். ஆக, இவர்களுக்கு ஒரு வருடத்திற்கு மூன்று மதிப்பெண்கள் ( இரண்டு சர்வீஸ் மார்க் + ஒரு சீனியாரிட்டி மார்க்) கிடைக்கும். இதற்கும் அதிகபட்சம் பத்து மதிப்பெண் தான். தமிழ்நாடு மருத்துவ நுழைவுத் தேர்வு முதுகலை படிப்புக்கு 90 மதிப்பெண்களுக்கு நடக்கும். அதில் ஒருவர் எடுக்கும் மதிப்பெண்ணோடு இந்த சீனியாரிட்டி + சர்வீஸ் மதிப்பெண்கள் கூட்டப்பட்டு 100 க்கு மதிப்பெண் கணக்கிடப்பட்டு முடிவுகள் வெளியாகும் .

Dr. அம்பேத்கர் அவர்களுக்கு நினைவிடம்; குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அடிக்கல் நாட்டினர்.

இளங்கலை மருத்துவம் முடித்து மூன்று வருடங்களான ஒருவர்
ஒருவர் 90க்கு 60 மதிப்பெண்கள் எடுக்கிறார் என்றால் அவர் அரசு வேலையில் இல்லை என்றால் அந்த மூன்று வருடங்களுக்கு சீனியாரிட்டி மதிப்பெண் மூன்று மார்க் சேர்த்து 100 க்கு 63 மதிப்பெண்கள் வாங்குவார். ஆனால் அவர் அரசு வேலையில் இருந்தால் மூன்று வருடங்களுக்கு மூன்று சர்வீஸ் மார்க் + மூன்று சீனியாரிட்டி மார்க் சேர்த்து மொத்தம் 66 மதிப்பெண்கள் வாங்குவார்.

இதே அவர் ராமநாதபுரம், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மலை வாழ் பிரதேசங்களில் வேலை செய்திருந்தால், மூன்று வருடங்களுக்கு ஆறு சர்வீஸ் மதிப்பெண் + மூன்று சீனியாரிட்டி மதிப்பெண் என 69 மதிப்பெண்கள் மொத்தம் வாங்குவார். தமிழகத்திற்கான 69 சதவிகித இட ஒதுக்கீட்டு அடிப்படையில் முதுகலை இடங்களுக்கு அனுமதி நடத்தப்பட்டு வந்தது. அரசுப் பணியின் மூலம் முதுகலை மருத்துவம் படித்தவர்கள் தாங்கள் பணிக்காலம் முடியும் வரை அரசுப் பணியில் இருப்பர்.

(மேற்சொன்ன தகவல்களைத் தந்த : Farook Abdulla Dr. அவர்களுக்கு நன்றி.)
நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ முதுகலை சேர்க்கை முறை அமலுக்கு வந்த பிறகு முதுகலை அனுமதியில் இதற்கெல்லாம் இடமின்றிப் போய்விட்டது.

இதற்கென வேறு விதிகள் உண்டா?

Medical council of India ஒரு இன்சென்டிவ் முறையை விதித்துள்ளது. அதற்கு முரணான தமிழக அரசின் அனைத்து ஒதுக்கீட்டு ஆணைகளையும் சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்துவிட்டது. 2017ம் வருடத் தீர்ப்பின்படி in-house doctors களுக்கான ஒதுக்கீட்டு அரசாணையையும் ரத்து செய்தது சென்னை உயர் நீதி மன்றம். நீட் தேர்வு மற்றும் MCI விதிகளிக்கு எதிரான எந்த ஒரு புதிய நடைமுறையையும் எந்த மாநிலமும் இனிமேல் பின்பற்ற முடியாது என்பதே அத்தீர்ப்புகளின் மொத்த சாராம்சம்.

ஆந்திராவில் நீட் தேர்வு இல்லை என்கிறார்களே இது உண்மையா?

தவறு. இதற்கு முன்பு அகில இந்திய கோட்டா என்று 15% இளங்கலை இடங்கள் ஒவ்வொரு கல்லூரிக்கும் (minority and management college seats தவிர்த்து) ஒதுக்கப்பட்டபோது ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதில் சேர விருப்பம் கோரப்பட்டது. அப்போது ஆந்திரமும் கஷ்மீரும் அந்த விருப்பத் தேர்வை வேண்டாம் என முடிவெடுத்தன. அந்த மாநில மருத்துவக் கல்லூரிகளில் 15% All India Quota சேர்க்கை இல்லை. அதனால் அந்த மாநில மாணவர்களுக்கு மற்ற மாநிலங்களில் அதே அகில இந்திய கோட்டா சீட்ஸ்/ அனுமதி கிடையாது. ஆனால் நீட் முறையில் மட்டுமே அட்மிஷன் என்று சட்டம் வந்த பிறகு ஆந்திரா, தெலங்கானா, கஷ்மீர் உட்பட நாடெங்கிலும் உள்ள Minority, Non Minority, Management Seats and Govt. seats in Private Colleges, NRI quota seats என்று எல்லா மருத்துவப் படிப்புக்கான இளங் கலை மற்றும் முதுகலை சீட்களும் நீட் தேர்வு மூலமாக மட்டுமே என்று அனுமதி என்று ஆகி விட்டது.

எந்த ஒரு மாநிலத்திற்கும் நீட் நுழைவுத் தேர்விலிருந்து முழு விலக்கு தரப்பட்டடுள்ளதா?

தற்காலிக விலக்கு மட்டும் தரப் பட்டது. அதுவும் 2017 ஆண்டோடு சரி். இப்போது யாருக்கும் எந்த விதமான தற்காலிக அல்லது முழு விலக்கும் கிடையாது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு மருத்துவக் கல்லூரியின் ஒட்டு மொத்த மாணவர் சேர்க்கையையே உச்ச நீதிமன்றம் நீட் தேர்வு இல்லாமல் தேர்ந்தெடுத்த காரணத்தால் கடந்த வருடம் ரத்து செய்துவிட்டது.

செல்வி. ஜெயலலிதா அவர்கள் நல்ல உடல் நிலையில் முதல்வர் நாற்காலியில் இருந்தவரை தமிழ்நாட்டில் நீட் இல்லை என்பது சரியா?

அப்படி இல்லை. அவர் நீட் தேர்வை முழு மூச்சாக எதிர்த்தார் என்பது உண்மையே. ஆனால் ‘சங்கல்ப் ட்ரஸ்ட்’ என்ற அமைப்பு தாக்கல் செய்த பொது நல வழக்கில் உச்ச நீதிமன்றம் எடுத்த நிலைப்பாட்டால் தான் நீட் தேர்வு இந்த அளவிற்கு நாடெங்கும் நடை முறைக்கு வந்தது. ஜெ. முதல்வராக இருக்கும் போதே முதுகலைக்கும் அகில இந்திய சீட்டுக்கும் தமிழ் நாட்டில் நீட் தேர்வு வந்து விட்டது. ஜெ. இன்று ஜெ. தமிழக முதல்வராக இருந்திருந்தாலும் தற்போது இருந்த நிலைதான் இருந்திருக்கும். ஏன் என்றல் அவரது நிலைப் பாட்டினை மத்திய அரசு ஏற்றாலும் உச்ச நீதிமன்றம் ஏற்க வில்லை. ஒரு வருடத்திற்கான விலக்கு மட்டுமே அதிமுக அரசால் பெற முடிந்தது. சென்ற வருடம் அதையும் உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. அரசின் கைகளை விட்டு உச்ச நீதி மன்றத்தின் கைகளுக்கு நீட் விதிகள் சென்று விட்ட சூழ்நிலையில் ஜெ. உட்பட எந்த ஒரு அரசியல் தலைவராலும் அரசியல் அமைப்புச் சட்டத்தைத் திருத்தாமல் மாநில அரசின் சட்டத்தை வைத்து மட்டும் நீட் தேர்வை தவிர்த்திருக்க முடியாது என்று கருதுகிறேன்.

(மேலதிக விவரங்களுக்கு; https://www.quora.com/Which-Private-Colleges-come-under-neet )

தற்போதைய திமுக அரசால் நீட் நழைவுத் தேர்வை ரத்து செய்ய முடியுமா?முடியாது.

நீட் தேர்வு இல்லாமல் மருத்துவப் படிப்பு படிக்க முடியாதா?

இப்போதைய சூழ்நிலையில் முடியாது.

AIIMS, JIPMER போன்ற நிறுவனங்களுக்கு நீட் ஏன் பொருந்தவில்லை?

ஏன் என்றால் அவை Indian Medical councilன் அதிகாரத்திற்குள் வராத மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தில் வரும் சிறப்புச் சட்டங்களின் கீழ் நடத்தப்படுபவை.
அந்த நிறுவனங்கள் தொடங்கிய காலம் முதலே தனியான நுழைவுத் தேர்வு மூலமாகத்தான் மாணவர்களை அனுமதித்து வருகின்றன. அந்தத் தேர்வுகள் நீட் தேர்வுகளை விடக் கஷ்டமானவை. மற்ற மருத்துவக் கல்லூரிகள் எல்லாம் இந்திய மெடிக்கல் கவுன்சிலின் அதிகார வரம்பிற்குள் வரும் என்பதால் அவற்றுக்கு நீட் தேர்வு கட்டாயம்.

ஆனால் 2019ம் வருடம் முதல் பாஜக தலைமையிலான நடுவண் அரசு AIIMS மற்றும் JIPMER ஆகிய மருத்துவக் கல்லூரிகளுக்கும் நீட் நுழைவுத் தேர்வை கொண்டு வந்துவிட்டது

ரஷ்யா, சீனா போன்ற அயல் நாட்டு மருத்துவக் கல்லூரிகளில் படித்தவர்களுக்கும் நீட் தேர்வு அவசியமா?

2018ம் வருடத்திலிருந்து அதற்கும் நீட் கட்டாயமே.

ஆயுர்வேதா, சித்தா, ஹோமியோ, யுனானி என்ற அலோபதி அல்லாத மருத்துவப் படிப்புக்கும் நீட் கட்டாயமா?

ஆம், 2018ம் வருடத்திலிருந்து அவசியம்.

வெளிநாட்டில் மருத்துவப் பட்டம் பெற்றவர்கள் இறுதியாண்டுக் கல்வி முடித்தவுடன் இங்கே மருத்துவராக முடியுமா?

முடியும். ஆனால் இந்திய மெடிக்கல் கவுன்சில் நடத்தும் சிறப்புத் தேர்வில் தேர்ச்சி பெறாமல் அவர்கள் இந்தியாவில் மருத்துவராகப் ப்ராக்டிஸ் செய்ய முடியாது.

நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி சட்டம் என்ன சொல்கிறது?

நீட் தேர்வை நாடெங்கிலும் ரத்து செய்ய வேண்டுமானால் அதற்கு இரண்டு வழிகள் உண்டு.

1. நீதிமன்றம் மூலமாக
2. பாராளுமன்றம் மூலமாக.

1. நீதிமன்றம் மூலமாக.

நீட் தேர்வை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் தான் உள்ளன. அதற்கான ஐந்து நீதிபதிகள் கொண்ட பேராயம் ஒன்று அமைக்கப்பட்டு இரு தரப்பு விசாரணைக்குப் பிறகு ஏகமனதாகவோ அல்லது பெரும்பான்மை (3 out of 5) நீதிபதிகளோ நீட் தேர்வுக்கான Medical Council சட்டத்தின் 10-D பிரிவு செல்லாது என அறிவித்தால் மருத்துவ மாணவச் சேர்க்கைக்கு நீட் தேர்வுகள் இருக்காது.

அவ்வாறான தீர்ப்பு வர வாய்ப்பு உண்டா?

நடக்கலாம். நடக்காமலும் போகலாம்.

2. பாராளுமன்றம் மூலமாக:

ஒரு வேளை நடுவண் அரசில் ஆளுங்கட்சியாக உள்ள ஏதோ ஒரு அரசியல் கட்சி நீட் தேர்வு நமது நாட்டுக்குத் தேவையில்லை என்று கருதினால் பாராளுமன்றத்தில் அதற்கான மசோதா ஒன்றை அறிமுகப்படுத்தி பெரும்பான்மை உறுப்பினர்கள் அந்தச் சட்ட மசோதாவை ஆதரித்து ஓட்டளித்தால் மெடிக்கல் கவுன்சில் சட்டப் பிரிவு 10-D மற்றும் நீட் தேர்வுக்கான இதர சட்டப் பிரிவுகளை repeal செய்யமுடியும். Indian Medical Councilஐயும் மத்தியப் பட்டியலில் இருந்து மாற்றியாக வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே நீட் தேர்வுக்கு வழி இருக்காது.

அப்படிப்பட்ட நீட் தேர்வு ஒழிப்புச் சட்டம் இறுதியானதா?

இல்லை. ஏன் என்றால் அவ்வாறான ஒரு சட்டத் திருத்தத்தை எதிர்த்து யாராவது வழக்குத் தாக்கல் செய்தால் இரு தரப்பு விசாரணைக்குப் பிறகு அந்த நீட் தேர்வு ஒழிப்புச் சட்டத்தை செல்லாது என அறிவிக்கும் அதிகாரம் உயர்/உச்ச நீதிமன்றத்துக்கு உண்டு.

பாராளுமன்ற நடவடிக்கை மூலம் ஏதாவது ஒரு அரசியல் கட்சியாவது நீட் தேர்வை ஒழிக்குமா?

தற்போதைய சூழ்நிலையில் எந்த ஒரு அகில இந்தியக் கட்சியும் அதைச் செய்யாது என்பது என் அனுமானம்.

அப்படி என்றால் தமிழகத்திற்கு மட்டுமாவது நீட் தேர்வை நிரந்தரமாக விலக்க முடியுமா?

அது சாத்தியம்தான். எப்படி என்றால், தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு பொருந்தாது என்று ஒரு சட்டத்தை தமிழக அரசு சட்டப் பேரவையில் நிறைவேற்றி அதற்கு நடுவண் அரசின் சம்மதம் கோரி அதற்கு நடுவண் அரசு ஒப்புதல் அளித்து இந்திய குடியரசுத் தலைவர் சம்மதம் தெரிவித்தால் அச் சட்டம் அமலுக்கு வந்தால் நீட் தேர்வு தமிழகத்திற்கு மட்டும் பொருந்தாது.

அப்படிப்பட்ட முயற்சி எப்போதாவது எடுக்கப்பட்டதா?

ஆம். செல்வி ஜெ. அரசு இரண்டு வருடங்களுக்கு முன்பு அப்படிப்பட்ட சட்ட வரைவு ஒன்றை இயற்றி மத்திய அரசின் சம்மதத்திற்காக அனுப்பியது. ஆனால் மத்திய அரசு அதற்கு ஒப்புதல் அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க மறுத்துவிட்டது.

ஒரு வேளை நடுவண் அரசு சம்மதம் அளித்திருந்தால் என்ன ஆகும்?

நீட் தேர்வு என்பது தமிழக மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 15% All India Quota seats for MBBS மற்றும் 50 % All India Quota seats in PG seats மற்றும் புதிய விதிகளின் படி நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்களில் UG and PG இடங்களுக்கு மட்டும் நடத்தப்படும். மற்ற இடங்களை தமிழகம் தன் விதிகளின் படி நீட் தேர்வு இல்லாமல் நிரப்பிக் கொள்ளலாம்.

அப்படிப்பட்ட மாநிலச் சட்டத்தை நீதிமன்றம் ரத்து செய்ய முடியுமா?

முடியும். ஏன் என்றால் எந்தவொரு சட்டமும் நீதிமன்றத்தின் Judicial Review-க்கு உட்பட்டதே. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 9வது அட்டவணையில் அச்சட்டம் சேர்க்கப் பட்டால் கூட அச்சட்டத்தை செல்லாது என உச்ச நீதிமன்றம் அறிவிக்க முடியும்.

கல்வி என்ற பொருளை அரசியல் அமைப்புச் சட்டத்தின் concurrent list என்ற மத்திய , மாநில அரசுகளின் பொதுப் பட்டியலில் இருந்து மாநிலங்களின் தனிப் பட்டியலான State Listக்கு இனிமேல் மாற்ற வாய்ப்பு உண்டா?

அதுவும் சட்டப்படி சாத்தியம் தான்.
ஆனால் தற்போதைய சூழலில் பல காரணங்களுக்காக அது நடக்காது என நம்புகிறேன். கல்வி என்ற பொருள் மாநிலங்கள் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும் என்றால் அதற்கு இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை திருத்த வேண்டும். அதற்கு நமது பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் (ஆளுங்கட்சியாக யார் இருப்பினும்) அறுதிப் பெரும்பான்மை பலம் ( மூன்றில் இரண்டு பங்கு) கட்டாயம். மேலும் அந்த மசோதாவை நாட்டில் உள்ள மொத்த மாநிலங்களில் பாதி மாநிலங்களில் உள்ள சட்டப் பேரவைகளாவது சட்டமாக இயற்றியாக வேண்டும்.

ஏதாவது ஒரு அரசியல் கட்சியாவது இதைச் செய்யுமா?

தற்போதைக்கு அது சாத்தியம் என்று எனக்குத் தோன்ற வில்லை. காலம் தான் இதற்கு பதில் அளிக்க வேண்டும்.

நடுவண் அரசு எப்போது கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றியது?

1976ல் இந்திரா காந்தி தலைமையிலான காங். அரசு 42வது அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தத்தின் வாயிலாக அதைச் செய்தது. அது இன்று வரை தொடர்கிறது. அதன் பின்பு ஆட்சிக்கு வந்த ஜனதா கட்சி அரசு அதற்கு முன் இந்திரா காந்தி அரசால் கொண்டு வரப்பட்ட பல அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தங்களை வாபஸ் பெற்றாலும் இந்த பட்டியல் மாற்றத்தை திரும்பப் பெறவில்லை. அதன் பிறகு ஆட்சிக்கு வந்த எந்த ஒரு அரசும் அதைச் செய்ய முன்வரவில்லை.

ஏன் செய்யவில்லை?

கல்வி மாநிலப் பட்டியலில் இருந்தால் நடுவண் அரசால் அகில இந்திய அளவில் ஒரு பல்கலைக் கழகத்தையோ, ஆராய்ச்சி நிறுவனத்தையோ, கல்லூரியையோ தனியான சட்டமின்றி நிறுவி திறம்பட நடத்த முடியாது. நாடு தழுவிய அளவில் கல்வி நிலையங்களை நடுவண் அரசு தரமாக நடத்தி வருவது எளிதில் சாத்தியப்படாது. எனவே கல்வி என்பது மத்தியப் பட்டியலில் இல்லாது பொதுப் பட்டியலில் இருப்பதை ஒட்டு மொத்தமாகத் தவறு என்று கருத இயலவில்லை.
தவிர Indian Medical Council -ம் மத்தியப் பட்டியலில் இருப்பதால் மருத்துவக் கல்வி முழுமையாக மாநிலங்களின் கட்டுப்பாட்டில் வர இயலாது.

மாநிலச் சட்டத்திற்கு நடுவண் அரசு சம்மதம் தர மறுப்பது என்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது தானே?

இல்லை. இந்தியா ஒரு quasi federal அரசமைப்பைக் கொண்டது.
UK போல unitary ம் அல்ல. USA போல federalம் அல்ல. எனவே மாநில அரசுகளின் சட்டம் அனைத்தையும் நடுவண் அரசு கண்டிப்பாக அங்கீகரித்தாக வேண்டும் என்பது அவசியமில்லை. இதை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 254வது பிரிவு விளக்குகிறது. பொதுவாக மாநில அரசின் பல சட்டங்களை நடுவண் அரசு நிறைவேற்ற மறுப்பதில்லை. இந்து சுயமரியாதைத் திருமணம், இந்துப் பெண்களுக்கு பூர்விகச் சொத்தில் சம உரிமை, ஜல்லிக்கட்டு நடத்தும் உரிமை போன்ற பல விஷயங்களில் இதற்கு முன் தமிழகச் சட்டங்களுக்கு நடுவண் அரசு சம்மதம் கொடுத்திருக்கிறது.

அவ்வாறானால், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு முழு விலக்கு அளிப்பதில் நடுவண் அரசிற்கு என்ன தயக்கம்?

மருத்துவக் கல்வியை நாடு முழுவதும் ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற காங். அரசின் கொள்கையை தற்போதைய பாஜக அரசும் ஏற்றுக் கொண்டுள்ளது என்பது வெளிப்படை. மருத்துவப் படிப்புக்கான அட்மிஷன் நடைமுறையை மாற்ற வேண்டும் என்றால் அது நாடு முழுவதும் அமலாக்கப்பட வேண்டும் என்பதும் இவ்விரு கட்சிகளின் நிலைப்பாடு.
எனவே ஒரு மாநிலத்திற்கு மட்டும் அதிலிருந்து நிரந்தர விலக்கு அளிப்பது என்பது அவர்களது கொள்கைக்கு ஏற்றது அல்ல என்பது அவர்களின் எண்ணம். மேலும் உச்ச நீதிமன்றம் நீட் தேர்வை நடை முறைப்படுத்துவதில் காட்டும் வேகமும் மற்றொரு காரணம்.

நீதியரசர் A. K. Rajan தலைமையிலான நிபுணர் குழுவை எதற்காக தற்போதைய திமுக அரசு அமைத்துள்ளது? அந்த குழுவின் அறிக்கையை வைத்து தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியுமா?

நீட் தேர்வு முறையால் தமிழக மாணவர்களுக்கு மருத்துவச் சேர்க்கையில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதற்காக அக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. அவரது அறிக்கையின் அடிப்படையில் மீண்டும் நீட் தேர்வு முறையிலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி சட்ட சபையில் தீர்மானம் இயற்றவும், விலக்கு அளித்து சட்டம் இயற்றி நடுவண் அரசின் சம்மதத்திற்கு அனுப்பவும் மட்டுமே அந்த அறிக்கை உதவும். அதை ஒரு வேளை நடுவண் அரசு என்றால் கூட உச்ச நீதிமன்றமோ உயர் நீதிமன்றமோ ஏற்காது.

பின் எதற்காக அந்த அறிக்கை, குழு எல்லாம்?

மன்னிக்கவும். நான் அரசியல் பேச விரும்பவில்லை.

இப்பதிவின் நோக்கம் என்ன?

நீட் நுழைவுத் தேர்வுக்குப் பின்னால் உள்ள சட்ட வரலாற்றைச் சொல்வது மட்டுமே.

நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் தற்போதைக்கு யார் கையில் உள்ளது?

உச்சநீதிமன்றத்தின் கைகளில்
—–
Case laws Referred to: (2014) Supreme Court Cases Page 305 And (2016) 4 Supreme Court Cases Page 342

தொகுப்பு; இளம்குமார் சம்பத்
vaisambath@gmail.com

 

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here