பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி ராய்

0
715

பாரத விடுதலை இயக்கத்தின் முன்னோடியும் பஞ்சாப் சிங்கம் என்றழைக்கப்படுவருமான லாலா லஜபதி ராய், காந்தியின் வருகைக்கு முன்பு பாரத சுதந்திரத்துக்காக போராடியவர்களில் முக்கியமான மூன்று தலைவர்களில் ஒருவர். லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர் மற்றும் விபின் சந்திர பால் இம்மூவருக்கும் இணையான முக்கியத்துவம் இருந்ததைக் குறிக்கும் வகையில் அவர்கள் லால் பால் பால் என்றே அழைக்கப்பட்டனர். இவர்களில் ஒருவரான லாலா லஜபதி ராய் 1865 ஜனவரி 28 அன்று இன்றைய பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் பிறந்தார்.

சட்டம் பயின்ற லாலா லஜபதி ராய் வழக்கறிஞராகவும் பத்திரிகையாளராகவும் பணியாற்றினார். தன் இள வயதிலேயே ஹிந்து மத வாழ்க்கைமுறை மீது பெரும் நாட்டமும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபாடும் கொண்டிருந்தார். சுவாமி தயானந்த சரஸ்வதியின் மதச் சீர்திருத்தக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு ஆரிய சமாஜத்தில் உறுப்பினரானார். பிறகு இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்தார். பிரிட்டிஷ் அரசின் அடக்குமுறைகளை எதிர்த்தார். முழு அரசியல் விடுதலை மட்டுமே தீர்வு என்று முழங்கினார். ஒரே மொழிதான் நாட்டின் ஒருமைப்பாட்டைக் கட்டிக்காக்கும் என்று கூறிய அவர், ஹிந்தியை தேசிய மொழியாக்க பல முயற்சிகளை மேற்கொண்டார்.

இந்திய ஹோம் லீக் சொசைட்டி ஆஃப் அமெரிக்கா’ அமைப்பை உருவாக்கினார். ‘யங் இந்தியா’ என்ற நூலை எழுதினார். அது வெளியிடப்படும் முன்பே இந்த நூலை பிரிட்டிஷ் அரசு தடைசெய்தது. இவர் எழுதிய ‘அன்ஹேப்பி இந்தியா’ நூல் ஆங்கிலேயர் ஆட்சியால் துன்புறும் பாரதத்தவர்களின் நிலையைப் படம்பிடித்துக் காட்டியது. சத்ரபதி சிவாஜி உள்ளிட்ட மாவீரர்களின் வாழ்க்கை வரலாறு, பகவான் கிருஷ்ணரின் கதைகளையும் எழுதியுள்ளார்.

பஞ்சாபில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றதற்காக பிரிட்டிஷ் அரசு அவரை பர்மாவுக்கு நாடு கடத்தியது. அரசுக்கு எதிராகச் செயல்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லாததால் தாய்நாடு திரும்ப அனுமதித்தது. 1920ல் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் ஆனார். 1928 அக்டோபர் 30 அன்று சைமன் கமிஷன் இந்தியாவுக்கு வருகை தந்தபோது எதிர்த்து அமைதி வழியில் போராட்டங்களை நடத்தினார். எனினும் பிரிட்டிஷ் அரசு கடுமையாகத் தாக்கியதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். பின்னர் சில தினங்களிலேயே அவர் உயிர் பிரிந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here