சுவாமி சித்பவானந்தர்

0
783

ஸ்ரீராமகிருஷ்ண குருகுல மரபைச் சேர்ந்த துறவியும், சிறந்த கல்வியாளருமான சுவாமி சித்பவானந்தர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள செங்குட்டைப்பாளையம் கிராமத்தில் பிறந்தார். சிறுவயது முதலே இவருக்கு பல சாதுக்களின் வழிகாட்டுதல்கள் கிடைத்தது. சத்குரு சுவாமிகள் இவரிடம் பல நூல்களைத் தந்து, உரக்கப் படிக்கச் சொல்லி கேட்பார். வெளிநாடு சென்று படிக்க, கப்பல் பயணம், பாஸ்போர்ட் ஏற்பாடுகளுக்காக சென்னை வந்தபோது சுவாமி விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகள் என்ற நூலைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது இவரது மனதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.

உடனடியாக வெளிநாடு செல்லும் எண்ணத்தைக் கைவிட்டார். விவேகானந்தர், ராமகிருஷ்ணரின் நூல்களைப் படித்தார். 1920ல் சென்னை மாநிலக் கல்லூரியில் கணிதம், அறிவியல், தத்துவம் பயின்றார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளில் நல்ல புலமை பெற்றார். தாயின் மறைவால் வேதனை அடைந்த அவர், மன அமைதிக்காக அவ்வப்போது மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்துக்குச் சென்றுவந்தார்.

ஆன்மிகத்திலும், துறவறத்திலும் அவருக்கு மெல்ல நாட்டம் பிறந்தது. கல்லூரிப் படிப்பை முடிக்காமலேயே ராமகிருஷ்ண மடத்தின் சுவாமிகளுடன் கல்கத்தா சென்றார். பேலூர் மடத்தில் சிவானந்த மகராஜ் இவருக்கு பிரம்மச்சர்ய தீட்சை அளித்து ‘திரயம்பக சைதன்யர்’ என்று பெயர் சூட்டினார். பின்னர் நாடு முழுவதும் யாத்திரை மேற்கொண்டார். பிறகு 1926ல் ஊட்டி ராமகிருஷ்ண மடத்தில் ஸ்வாமி சிவானந்தர் இவருக்கு சன்னியாச தீட்சை அளித்து ‘சுவாமி சித்பவானந்தர்’என்று பெயர் சூட்டினார்.

யோகம், தியானம், சாஸ்திரம், உபநிடதம், பல மொழிகள் கற்றார். உதகை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவராகவும் ஆனார். திருப்பராய்த்துறையில் ஆரம்பப் பள்ளி தொடங்கினார். அங்கு ராமகிருஷ்ண தபோவனத்தை நிறுவினார். குருகுல முறையில் விவேகானந்த வித்யாவன நடுநிலைப்பள்ளி, விவேகானந்த மாணவர் விடுதி என அடுத்தடுத்து ஏராளமான கல்வி நிறுவனங்களைத் தொடங்கினார். திருவேடகத்தில் ராமகிருஷ்ண மடமும் பெண்களுக்கான சாரதா தேவி சமிதியும் தொடங்கப்பட்டது.

இதிகாசங்கள், வேதாந்த நூல்கள், பகவத்கீதை, திருவாசகம் ஆகியவற்றுக்கான உரைகள், சிறுவர் கதைகள், நாடகம், தத்துவ விளக்கம், உரைநடை என 130க்கும் அதிகமான நூல்களைப் எழுதியுள்ளார். 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார். சுவாமி சித்பவானந்தர் 87-வது வயதில் மகாசமாதி அடைந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here