கட்டுரை திருப்பூர் குமரன்-நினைவு தினம்-ஜனவரி 11

0
954

 திருப்பூர் குமரன்  இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்ட இவர் கொடி காத்த குமரன் என்று அழைக்கப்படுகிறார்

இளமைப்பருவம்
        ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகிலுள்ள செ.மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் 1904 அக்டோபர் 4ம் தேதி, நாச்சிமுத்து முதலியார் – கருப்பாயி தம்பதியினருக்கு மூன்றாவது மகனாகக் குமரன் பிறந்தார். இவரது இயற்பெயர் குமாரசாமி முதலியார் ஆகும். குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப்படிப்பை ஆரம்ப பள்ளியிலேயே முடித்துக் கொண்டார். கைத்தறி நெசவுத் தொழிலை செய்து வந்த குமரன், 1923 இல் ராமாயி என்பாரைத் திருமணம் முடித்தார். கைத்தறி நெசவுத் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால், மாற்றுத்தொழில் தேடி திருப்பூர் சென்று, ஈஞ்ஞையூர் கந்தசாமி கவுண்டர் நடத்திய மில்லில் எடைபோடும் பணியில் சேர்ந்தார்.

இந்திய விடுதலைப்போரட்டத்தில் பங்கு
     காந்திய  கொள்கையில் அதிக ஈடுபாடு கொண்ட குமரன், நாட்டு விடுதலைக்காக காந்தி அறிவித்த போராட்டங்களில் கலந்து கொண்டார்.
ஜனவரி 10, 1932 இல் நடந்த ஆங்கிலேய அரசுக்கான எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட போது, ஆங்கில அரசின் காவல்துறையால் தடியடிக்கு உள்ளானார். கீழே விழுந்தநிலையிலும், அவர் தன் கையில் இருந்த, அக்காலத்தில் சுதந்திரத்தின் அடையாளமாகக் கருதப்பட்ட காங்கிரஸ் கொடியை விடாமல் உயர்த்திப் பிடித்தவாறே கிடந்தார். இதனால் “கொடிகாத்த குமரன்” என்று அறியப்படுகிறார்.

இறப்பு
     ஜனவரி 10 இல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட திருப்பூர் குமரன் 11 இல் மருத்துவமனையில் அதிகாலையில் உயிரிழந்தார். பொதுமக்கள் அவரது இறுதி ஊர்வலத்தில் பங்குகொண்டனர்.
குமரன் மறைந்த ஒரு மாதத்திற்குள் திருப்பூர் வந்த மகாத்மா காந்தி, அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். காமராஜர் உயிருடன் இருந்தவரை குமரன் குடும்பத்தினருடன், அவ்வப்போது தொடர்பு கொண்டு விசாரித்தார்.

நினைவகம்
   தமிழ்நாடு அரசு திருப்பூர் குமரன் தியாகத்தைப் போற்றும் வகையில் திருப்பூரில் திருப்பூர் குமரன் நினைவகம் ஒன்றை அமைத்துள்ளது. இங்கு தற்காலிக நூல் நிலையம் உள்ளது. படிப்பகம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. மேலும் இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்கள் வரைந்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here