மதரஸாக்களில் தேசிய கீதம்

0
471

மதரஸா பள்ளிகளில் ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு நடைமுறைகளில் தகுதி அடைப்படை இல்லாமல், மதம், உறவுமுறை போன்ற தனிப்பட்ட காரணங்களை வைத்து பதவிகளை வழங்கும் நெபோடிசம் கொள்கைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. உத்தரப் பிரதேச அரசு அதற்கு முடிவுகட்டும் நடைமுறைகளை முன்னெடுத்துள்ளது. அதன்படி, மதரஸா பள்ளிகளில் ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்ய மதரஸா ஆசிரியர் தகுதித் தேர்வு (எம்டெட்) போன்ற முன் தகுதித் தேர்வுகளை அறிமுகப்படுத்தவும் வாரியம் முடிவு செய்துள்ளது. மேலும், மதரஸாக்களில் மாணவர்கள் தேசிய கீதத்தை மற்ற காலை தொழுகைகளுடன் சேர்த்து பாடுவது கட்டாயம் என்று உத்தரப்பிரதேச மதரஸா கல்வி வாரியம் அறிவித்துள்ளது. உத்தரப்பிரதேச மதரஸா கல்வி வாரியத் தலைவர் இப்திகார் அகமது ஜாவேத் தலைமையில் நடைபெற்ற வாரியக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதுகுறித்து பேசிய வாரியத் தலைவர், “பல்வேறு பள்ளிகளில் தேசிய கீதம் பாடப்படுகிறது. மதரசா மாணவர்களிடமும் தேசபக்தியை வளர்க்க நாங்கள் விரும்புகிறோம். இதன் மூலம் அவர்கள் நமது வரலாறு, கலாச்சாரத்தை அறிந்து கொள்ள விரும்புகிறோம்.” என தெரிவித்தார். சுதந்திர தினத்தன்று மதரஸாக்களில் மூவர்ணக் கொடியை ஏற்றுவதும் தேசிய கீதம் பாடுவதும் கட்டாயம் என்று உத்தரப்பிரதேச மதரஸா கல்வி வாரியம் 2017ல் அறிவித்தது. கடந்த 2018ல், சுதந்திர தினத்தன்று தேசிய கீதம் பாடுவதை தடுத்த மத குருமார்கள் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதுடன் அந்த மதரசாவின் உரிமமும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here