ஆளுநர் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் அறிக்கை

0
387
மயிலாடுதுறை தர்மபுரம் ஆதீனம் 27வது குருமஹாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் ஞானரத யாத்திரையை துவக்கி வைக்க சென்ற மேதகு தமிழக ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் கட்சி கூட்டணியினரான கம்யூனிஸ்ட், விசிக, திக, மனிதநேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ போன்றவர்கள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் ஆளுநர் வாகனம் மீதும், பாதுகாப்பு வாகனங்கள் மீதும் கருப்பு கொடியுடன் கூடிய தடிகளை,கட்டைகளை, செருப்புகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். காவல்துறையின் கண்முன்னே இந்த அராஜக சம்பவம் நடந்துள்ளது.
சில தினங்களாகவே ஆளும் கட்சியினரும் , அதன் கூட்டணிக் கட்சியினரும் பல்வேறு வகையில் ஆளுநருக்கு எதிராக கருத்துக்களைக் கூறி வருகின்றனர், சில சமயங்களில் தரக்குறைவாகவும் விமர்சனம் செய்கின்றனர்.
ஆளுநர் அவர்கள் சட்டம் தனக்கு வழங்கியுள்ள அதிகாரத்திற்கு உட்பட்டே அனைத்து விஷயங்களையும் முடிவெடுக்கிறார் என்பதை சுலபமாக இவர்கள் மறந்து விடுகின்றனர். ஒருவேளை உண்மையாகவே மாநில அரசிற்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம் செய்திருந்தால் சட்ட ரீதியாக நீதிமன்றங்கள் வாயிலாக நடவடிக்கை எடுக்க முடியும்.
அதை விடுத்து அவரது வாகனத்தை தாக்குவது போன்ற அராஜக செயல்களில் இறங்குவது தமிழகத்தின் அரசியல் மாண்புகளை கேவலப்படுத்துவதாக அமையும். தமிழகத்திற்கென்று அரசியல் நாகரீகம் உள்ளது. அதனைக் கேவலப்படுத்தும் விதமாக நாட்டின் பிற மாநில மக்களிடையே தமிழர்களுக்கு தலை குனிவை ஏற்படுத்தியுள்ளது இன்றைய செயல். தமிழகத்தில் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் சக்திகள் அதிகரித்துள்ளன என்பதை உணர்த்துகிறது.
இந்தச் சம்பவத்தை இந்துமுன்னணி வன்மையாக கண்டிப்பதுடன் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்ட இந்த கலவரக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கையை தமிழக அரசு பாரபட்சமின்றி எடுக்க வேண்டுமெனவும், இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆளும் கூட்டணிக் கட்சியினரின் சார்பில் முதல்வர் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும் இந்து முன்னணி வலியுறுத்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here