ஜி20 தலைமை பொறுப்பில் இந்தியா: ‘ஒரு பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற உணர்வை ஊக்குவிக்கும் – பிரதமர் மோடி

0
113

ஜி20 குழுவின் தலைவர் பதவியை இன்று முதல் இந்தியா அதிகாரப்பூர்வமாக ஏற்கிறது. உலகின் பொருளாதார ரீதியாக வளமான நாடுகளின் குழுவான ஜி20 மாநாட்டிற்கு இந்தியா ஒரு வருடம் முழுவதும் தலைமை தாங்கும்.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
இந்தியாவின் ஜி20 நிகழ்ச்சி நிரலானது உள்ளடக்கியதாக, செயல் சார்ந்ததாக, லட்சியம் சார்ந்ததாகவும், தீர்க்கமானதாகவும் இருக்கும்.இந்தியாவின் ஜி 20 தலைமையை நல்லிணக்கம் மற்றும் நம்பிக்கையின் தலைமையிடமாக மாற்ற நாம் ஒன்றிணைவோம்.
மனிதத்தை மையப்படுத்திய உலகமயமாக்கல் நோக்கி, புதிய முன்னுதாரணம் ஏற்படுத்திட நாம் அனைவரும் சேர்ந்து உழைப்போம். மிகவும் சக்திவாய்ந்த ஜி20 நாடுகளிடையே, பிற நாடுகளுடனும் நேர்மையான உரையாடலை இந்தியா ஊக்குவிக்கும்.
குடிமக்கள் நலனுக்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், ஜனநாயகத்தின் அடித்தளதிற்கு இந்தியா பங்களிக்கும். இந்தியாவின் ஜி 20 முன்னுரிமையானது, நமது ஒரே பூமியை குணப்படுத்துவதில், ஒரு குடும்பத்திற்குள் நல்லிணக்கத்தை உருவாக்குவதிலும், நமது ஒரே எதிர்காலத்திற்கான நம்பிக்கையை கொடுப்பதிலும் கவனம் செலுத்தும்.
இந்தியாவின் ஜி-20 தலைவர் பதவியானது, ஒற்றுமையின் உணர்வை ஊக்குவிக்கவும், ‘ஒரு பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்’ என்ற உணர்வை உணரவும் செயல்படும். உணவு, உரங்கள் மற்றும் மருத்துவப் பொருட்கள் ஆகியவற்றின் உலகளாவிய விநியோகத்தை அரசியலற்றதாக்க இந்தியா முயல்கிறது. அதனால் புவிசார் அரசியல் பதட்டங்கள் மனிதாபிமான நெருக்கடிகளுக்கு வழிவகுக்காது.
ஒவ்வொரு இந்தியனும் ஜி-20 தலைவர் பதவியை ஏற்பது பெருமைக்குரிய தருணம். நமது நாட்டின் பல்வேறு நகரங்களிலும் மாநிலங்களிலும் ஜி20 கூட்டங்களை நடத்துவோம். இதன்மூலம், இந்தியாவின் அதிசயம், பன்முகத்தன்மை, உள்ளடக்கிய பாரம்பரியங்கள் மற்றும் கலாச்சார செழுமையை நம் விருந்தினர்கள் முழுமையாக அனுபவிப்பார்கள்.
இந்தியாவில் ஜனநாயகத்தின் தனித்துவமான கொண்டாட்டத்தில் நீங்கள் அனைவரும் பங்கேற்க விரும்புகிறோம். நாம் இணைந்து ஜி20-ஐ உலகளாவிய மாற்றத்தின் கருவியாக மாற்றுவோம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here