தேசிய இளைஞர் திருவிழா

0
109

சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளையொட்டி வரும் 12ம் தேதி கர்நாடக மாநிலம் ஹூப்பாலியில் இந்தாண்டுக்கான தேசிய இளைஞர் திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இத்தகவலை செய்தியாளர்களிடம் மத்தியஅமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்தார். மேலும், “கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டம் ஹூப்பாலியில் வரும் 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை 26வது தேசிய இளைஞர் திருவிழா நடைபெறுகிறது. இதனை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகமும். கர்நாடக மாநில அரசும் இணைந்து நடத்துகின்றன. தேச சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவை நாடு கொண்டாடி வரும் நிலையில், அமிர்த காலத்தில் நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்களின் பங்கை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த விழா நடைபெறுகிறது. பிரதமரின் 5 உறுதிமொழிகள் கொண்ட செய்தியை இளைஞர்களிடையே பரப்பும் முயற்சியாக இது மேற்கொள்ளப்படும். பாரதம், இந்த ஆண்டில் ஜி20 அமைப்பில் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. இது ஒவ்வொரு குடிமகனுக்கும் பெருமை அளிக்கும் விஷயம். இதனை முன்னிட்டு மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் நாடு முழுவதும் இளைஞர்களுக்கான ‘ஒய் டாக்ஸ்’ நிகழ்ச்சியை நடத்த உள்ளது. ஜி20 தலைமை பொறுப்பையொட்டி ஏற்பாடு செய்யப்படும் ‘இளைஞர் 20’ மாநாட்டு கருப்பொருளை நாட்டின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் கொண்டு செல்வதில் கவனம் செலுத்தப்படும். இந்த ஆண்டின் இளைஞர் திருவிழா, பசுமை இளைஞர் திருவிழாவாக கொண்டாடப்படும். திருவிழாவில் வழங்கப்படும் நினைவுப்பரிசுகள், பதக்கங்கள், பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் மீண்டும் பயன்படுத்தக் கூடிய பொருட்களாலானவையாக இருக்கும். மேலும், வரும் 15ம் தேதி காலை 6 மணி முதல் 8 மணி வரை ஏற்பாடு செய்யப்படும் யோகத்தான் நிகழ்ச்சியில், கர்நாடக மாநிலத்தின் 31 மாநிலங்களை சேர்ந்த 5 லட்சம் பேரை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது” என அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து மீண்டும் வரும் 19ம் தேதி பிரதமர் மோடி மீண்டும் கர்நாடக மாநிலம் கலபுரகிக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் ஒரு விழாவில் கலந்து கொண்டு லம்பானி இன மக்களுக்கு வீட்டு உரிமை பத்திரங்களை வழங்குகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here