முதலீடுகளுக்கு பாரதம் மிகச்சிறந்த இடம்

0
102

மத்தியப் பிரதேச அரசு சார்பில் ‘இன்வெஸ்ட் மத்தியபிரதேஷ்’ என்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு அம்மாநிலத்தின் இந்தூரில் நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி இதில் காணொளிகாட்சி மூலம் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர், “வலிமையான ஜனநாயகம், நிறைந்த இளைஞர் சக்தி, நிலையான அரசு ஆகியவை நமது நாட்டுக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்து வருகிறது. இதன் காரணமாக அனைவருக்கும் சிக்கலற்ற வாழ்க்கையை உறுதிப்படுத்தவும், எளிதாக தொழில்களைத் தொடங்கி நடத்தவும் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. கடந்த 2014ம் ஆண்டில் இருந்து நமது பாரதம், சீர்திருத்தம், மாற்றம், முன்னேற்றம் எனும் பாதையில் வேகமாக பயணித்து வருகிறது. முதலீடுகளைச் செய்வதற்கு பாரதம் மிகச் சிறந்த இடமாக திகழ்கிறது. உலகின் நம்பகமான பொருளாதார அமைப்புகள் பாரதத்தின் வளர்ச்சியை புகழ்ந்துள்ளன. உலக பொருளாதாரத்தில் பாரதம் ஒரு நம்பிக்கை அளிக்கும் ஒளிப் புள்ளியாக திகழ்கிறது என சர்வதேச கண்காணிப்பு நிதியம் தெரிவித்துள்ளது. உலக சிக்கல்களைத் தீர்ப்பதில் மற்ற நாடுகளைக் காட்டிலும் பாரதம் சிறப்பாக செயல்படுவதாக உலக வங்கி கூறியுள்ளது. ஜி20 நாடுகளில் மிக வேகமான பொருளாதார வளர்ச்சியைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக பாரதம் திகழும் என்று பொருளாதார ஒத்துழைப்பு வளர்ச்சி அமைப்பு எனும் சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. இது பாரதத்தின் 10 ஆண்டுகள் மட்டுமல்ல; இது பாரதத்துக்கான நூற்றாண்டும்கூட என்று பன்னாட்டு நிறுவனமான மெக்கின்சியின் தலைமை செயல் அதிகாரி மோர்கன் ஸ்டேன்லி கூறியுள்ளதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். வலிமையான அடித்தளத்துடன் மிகப் பெரிய பொருளாதார சக்தியாக பாரதம் திகழ்வதே இதற்குக் காரணம். தனியார் துறை மீதான தேசத்தின் நம்பிக்கை, முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இதன் காரணமாகவே, பாதுகாப்பு, சுரங்கம், விண்வெளி உள்ளிட்ட துறைகள் தனியாருக்காக திறந்துவிடப்பட்டுள்ளன. வளர்ச்சி அடைந்த பாரதத்தை அடைய நாங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம்” என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here