சுதந்திரமாக நடமாடும் மாவோயிஸ்டுகள்

0
112

காவல்துறையின் தோல்வி மலைப் பகுதிகளில் இடதுசாரி மாவோயிஸ்டு பயங்கரவாதிகளின் நடமாட்டத்தை அதிகரிக்கச் செய்வதாக கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கதை சுவாரஸ்யமானது. மாவோயிஸ்டுகள் பிப்ரவரி 18ம் தேதி கண்ணூர், கெளகாமில் உள்ள கூனம்பல்லா காலனியை அடைந்தனர். இந்த குழு, சட்டவிரோதமான சி.பி.ஐ மாவோயிஸ்டு மக்கள் விடுதலைப் படையின் பாணாசுர 2வது தளத்தைச் சேர்ந்தது. ஆயுதங்களுடன் வந்த அவர்கள், தங்களது அலைபேசிகள், பவர் பேங்க்களுக்கு சார்ஜிங் செய்வதற்காக அங்குள்ள தினேசன் என்பவரின் வீட்டில் இரண்டு மணி நேரம் முகாமிட்டிருந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து போவதற்கு முன் 4,000 ரூபாயை வீட்டின் உரிமையாளரிடம்கொடுத்தனர். அவர்களுக்கு தேவையான சில பொருட்களை வாங்கி வைக்குமாறும் அடுத்த நாள், அதே நேரத்தில், அதே இடத்திற்கு வந்து அவற்றை பெற்றுக்கொண்டு செல்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அடுத்த நாள் பொருட்களை சேகரிக்க வருவோம் என்று மாவோயிஸ்டுகள் கூறியது குறித்து பூர்வீகவாசிகள் காவல்துறைக்கு தகவல் கொடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வீட்டு உரிமையாளரும் பொருட்களை வாங்கி தனது வீட்டிற்கும் காட்டிற்கும் இடையில் அவர்கள் சொன்ன இடத்தில் வைத்தார். மாவோயிஸ்டுகள் மறுநாள் கூறியபடியே அங்கு திரும்பி வந்து பொருட்களை எடுத்துச் சென்றனர். ஆனால், அவர்களை கைது செய்ய காவலர்கள் தான் அங்கு வரவேயில்லை. அங்கு வந்த மாவோயிஸ்டுகள் நான்கு பேர் என்றும் அதில், இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் இருந்தனர் என்றும் அவர்களில் 3 பேர் சுந்தரி, உன்னிமாயா மற்றும் சந்துரு என தாங்கள் அடையாளம் கண்டதாகவும் ஒரு குற்றவாளி அடையாளம் காணப்படவில்லை என்றும் உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். கண்ணூர் மற்றும் வயநாடு மாவட்டங்களில் மாவோயிஸ்டு பயங்கரவாத குழுக்கள் தீவிரமாக செயல்படுவதை இந்த அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன. அவர்களது நடமாட்டம், வரும் இடம், நேரம் குறித்த தகவல்கள் கிடைத்தும் காவல்துறை ஏன் வரவில்லை, அவர்களை பிடிக்க என்ன நடவடிக்கை எடுத்தது, கேரள முதல்வரும் சி.பிஎம் கட்சித் தலைவருமான பினராயி விஜயன் தலைமையிலான உள்துறை அமைச்சகம் என்ன செய்துகொண்டுள்ளது? என்பது அந்த கடவுளுக்குத்தான் தெரியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here