படித்ததில் பிடித்தது!

0
224

ஐந்து வயது சிறுமி, தன் அம்மாவுடன் சூப்பர் மார்க்கெட் சென்றிருந்தாள்.
அங்கே ஒரு முத்து மாலையை பார்த்தாள். அது வேண்டுமென அம்மாவிடம் அடம்பிடித்தாள்.

“அம்மு… இது அழகா இருக்கு, ஆனால் விலை அதிகமா இருக்கே.. தவிர இது தரமில்லாத ப்ளாஸ்டிக் மாலை..

நான் உன்னோட பிறந்த நாளைக்கு அப்பாகிட்ட சொல்லி ‘ரியலான ஒரிஜினல் பியர்ள்ஸ்’ மாலை வாங்கி தரசொல்றேன்… இது வேண்டாம்மா” என்றாள் அம்மா.

ஆனால் சிறுமி, அழுது பிடிவாதம் செய்து அந்த ப்ளாஸ்டிக் முத்துமாலையை வாங்கிக் கொண்டாள்…

சிறுமிக்கு அந்த முத்துமாலை மிகவும் ஃபேவரெட் ஆன பொருளாகிப் போனது.
அதை எங்கு சென்றாலும் அணிந்திருந்தாள்.

பள்ளிக்கு செல்லும்போதும், நண்பர்களுடன் விளையாடும்போதும், ஏன் படுக்கும்போது கூட உடன் கழுத்தில் போட்டிருந்தாள்.

பிளாஸ்டிக் மாலையை கழுத்திலேயே போட்டிருந்தாள். அலர்ஜியால் கழுத்து நிறம் மாறி விடும் என என்னென்னவோ அம்மா சொல்லியும் கூட கேட்கவில்லை. எப்போதும் அதைப் பிரிய மனமில்லை அவளுக்கு.

சிறுமியின் அப்பா மிகவும் அன்பானவர். தினமும் அவர் சிறுமிக்கு படுக்கும் முன் கதை சொல்வார். ஒரு நாள் கதை சொல்லி முடித்ததும் கேட்டார், “அம்மு… என்னை உனக்கு பிடிக்குமா?”

”ஆமாம்பா ரொம்ப பிடிக்கும்.”

“அப்போ, உன்னோட முத்து மாலையை எனக்கு தரீயா?”

“ஓ.. முடியாதுப்பா… நீங்க வேற எதுனாச்சும் எடுத்துக்கோங்க.. என்னோட பிங்கி பொம்மையை வேணா எடுத்துக்கோங்க.. ஆனா முத்து மாலை மட்டும்
தரமாட்டேன்ம்பா…” என்றாள்.

“பரவால்லை குட்டிம்மா…” என்று புன்னகையுடன் பதில் சொன்னார் அப்பா.

இன்னொரு நாள் மீண்டும் கேட்டார், “அம்மு… என்னை உனக்கு பிடிக்குமா?”

”ஆமாம்பா ரொம்ப பிடிக்கும்” -அமுதா

“அப்போ, உன்னோட முத்து மாலையை எனக்கு தரீயா?” மீண்டும் கேட்டார்.

“ஓ.. முடியாதுப்பா… நீங்க வேற எதுனாச்சும் எடுத்துக்கோங்க.. வேணும்னா என்னோட குதிரை பொம்மையை எடுத்துக்கோங்க… முத்து மாலைய மட்டும் கேக்காதீங்கப்பா ப்ளீஸ்… அதமட்டும் நான் தர மட்டேன்.” என இம்முறையும் அழுத்தமாக மறுத்தாள் அமுதா.

இப்போதும் அதே புன்னகையுடன் “பரவாயில்லை குட்டி..” என்றார் அப்பா.

சில நாட்களுக்கு பிறகு ஒருநாள், அப்பா இரவு கதை சொல்ல வந்தபோது…. சிறுமி ஒரு தயக்கத்துடன், “இந்தாங்கப்பா…” என சொல்லிக் கொண்டே ஒரு சிறிய பெட்டியை திறந்து அதிலிருந்த அவளின் விருப்பமான முத்து மாலையை எடுத்து அப்பாவின் கைகளில் தந்தாள். அது பழசாகியும்… சில முத்துக்கள் உடைந்தும் போயிருந்தன.

அதை ஒரு கையில் வாங்கிக் கொண்ட அப்பா, மறு கையால் தன் பாக்கெட்டிலிருந்து ஒரு நீல வெல்வெட் பெட்டியை எடுத்தார். அதில் உண்மையான முத்துக்களால் ஆன ஒரு அழகிய முத்துமாலை இருந்தது.

அவர் அதை தன்னுடன் எப்போதும் வைத்திருந்தார். சிறுமி தன் மலிவான மாலையை தருவதற்காக காத்திருந்தார் அவர். அதை தந்தவுடன் அந்த உண்மையான மாலை தந்தார்.

“இதை உனக்கு தருவதற்காகத்
தான்டா அம்மு… நான் தினமும் அந்த ப்ளாஸ்டிக் மாலையை கேட்டேன்…” என்றார் அப்பா.

இந்த தகப்பன் வேறு யாருமல்ல… நம் எல்லோருக்கும் தந்தையான இறைவன்…
அந்த குழந்தை தான் நாம்.

ஆம். இதுபோலத் தான் நாமும் நம் வாழ்க்கையில் சில மலிவான விஷயங்களை கெட்டியாக பிடித்துக்கொண்டு கை விடுவதற்கு தயாராக இல்லை.

அத்தகையான போலியான விஷயங்களை கைவிட்டால் இறைவன் உண்மையான ஒன்றை நமக்கு பரிசளிப்பான்.

நமது மோசமான பழக்கங்கள், செயல்கள், தீய நட்புகள்/ உறவுகள்… போன்ற எது வேண்டுமானாலும் நம்முடன் மிகவும் பின்னிப் பிணைந்திருக்கலாம்.. அவைகளால் நமக்கு பாதிப்பு என தெரிந்தும் கூட கை விட கடினமானவைகளாக இருக்கலாம்…

ஆனால் அவைகளை எல்லாம் விட சிறந்தவைகள் நமக்காக காத்திருக்கின்றன…. அத்தகைய சிறப்பான ஒன்றை பெற வேண்டுமானால்… போலியான மலிவான விஷயங்களை நாம் கைவிட வேண்டும்.

அன்பே வடிவான இறைவன் சிறந்த ஒன்றை தராமல் நம்மிடமிருந்து எதையும் எடுத்துக் கொள்வதில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here