கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், 2022, அக்.,23ல், நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில், ஐ.எஸ்., பயங்கரவாதி ஜமேஷா முபின், 29, உயிரிழந்தார். இதுகுறித்து என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் விசாரித்து, ஜமேஷா முபின் கூட்டாளிகள், 11 பேரை கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர். இரு தினங்களுக்கு முன், கோவையை சேர்ந்த முகமது இத்ரிஸ், 25, கைது செய்யப்பட்டார். முதற்கட்ட விசாரணையில், ஜமேஷா முபினின் வலது கரமாக செயல்பட்ட முகமது இத்ரிஸ், ஹிந்து கோவில்களை தகர்ப்பது மற்றும் ஹிந்து தலைவர்களை கொலை செய்யும் சதி திட்டத்துடன் செயல்பட்டது தெரிய வந்தது. அவரை கைது செய்த போது, என்.ஐ.ஏ., அதிகாரிகள், மொபைல் போனை பறிமுதல் செய்தனர். அதை ஆய்வு செய்து முக்கிய தகவல்களை திரட்டி உள்ளனர். மேலும், முகமது இத்ரிஸ் கைதாவதற்கு சில தினங்களுக்கு முன், தன் நெருங்கிய கூட்டாளிகள் சிலரை சந்தித்துள்ளார். அவர்களை பல முறை தொடர்பு கொண்டுள்ளார். அந்த நபர்களை தேடும் பணி நடக்கிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.