சுதந்திரப் போராட்ட வீரரும் தமிழில் நவீன சிறுகதை தந்தை என்று போற்றப்படும் வ.வே.சுப்பிரமணிய ஐயர் பிறந்த தினம் இன்று

0
48

திருச்சி, வரகனேரியில் ஏப்ரல் 2, 1881ஆம் ஆண்டு பிறந்தவர்.
சென்னைக்குச் சென்று சட்டம் படித்து சென்னை மாநகர் ஜில்லா கோர்ட்டில் முதல் வகுப்பு ப்ளீடராக சேர்ந்து வக்கீல் தொழில் புரிந்தார். கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருதம், தமிழ் மொழிகளில் புலமை பெற்றிருந்தார். பாரிஸ்டர் பட்டம் பெறுவதற்காக1907-ல் லண்டன் சென்றார். அங்கே இந்தியா ஹவுசில் தங்கியிருந்த சமயத்தில் வீர சாவர்க்கர் உள்ளிட்ட சுதந்தர புரட்சி வீரர்களின் தொடர்பு கிடைத்தது. அவர்கள் ரகசியமாக நடத்தி வந்த அபிநவ பாரத் சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தார்.
ராணுவ வீரருக்குரிய போர்ப் பயிற்சிகள் பெற்றார். மற்றும் பல இளைஞர்களுக்கும் பயிற்சி அளித்தார். பாரிஸ்டர் படிப்பிலும் தேர்ச்சியடைந்தார். பட்டமளிப்பு விழாவில் பிரிட்டிஷ் ராஜ விசுவாச பிரமாணம் எடுத்துக் கொண்டால்தான், பட்டம் வழங்கப்படும் என்பதால் அந்த உறுதிமொழியை எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டார்.
இதனால் இவரைக் கைது செய்ய ஆங்கில அரசு ஆணையிட்டது. சீக்கியர் போல மாறு வேடம் பூண்டு, பிரிட்டிஷ் உளவாளிகளை ஏமாற்றி, துருக்கி, கொழும்பு வழியாக 1910-ல் புதுச்சேரி வந்து சேர்ந்தார்.அரவிந்த கோஷ், பாரதியார், நீலகண்ட பிரம்மச்சாரி ஆகியோருடன் இணைந்து விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். 1922-ல் சேரன்மாதேவியில் தமிழ்க்குருகுலம் என்ற கல்வி நிறுவனத்தைத் தொடங்கினார். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். குளத்தங்கரை ஆசிரமம் என்ற சிறுகதையை வெளியிட்டார். இதுவே முதன் முதலில் வெளிவந்த தமிழ் சிறுகதை. இவரது மங்கையர்க்கரசியின் காதல் என்ற புத்தகம்தான் தமிழில் வெளிவந்த முதல் சிறுகதை தொகுப்பு. 1921-ல் பெல்லாரி சிறையில் இருந்தபோது ‘கம்பராமாயணம் – எ ஸ்டடி’ என்ற ஆங்கில நூலை எழுதினார். ஆங்கிலத்தில் திறனாய்வுக் கட்டுரைகள் பல வடித்தார். கம்ப நிலையம் என்ற நூல் விற்பனையகம் தொடங்கி புத்தகங்களை வெளியிட்டார். மாஜினியின் வாழ்க்கை வரலாறு, நெப்போலியனின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட பல நூல்களையும் எழுதியுள்ளார். சுதந்திர போராட்ட வீரரும், தமிழில் நவீன இலக்கியத் திறனாய்வுக்கான அடிப்படைகளை அமைத்தவர் என்றும், தமிழ் நவீன சிறுகதை தந்தை என்றும் போற்றப்படும் வ. வே. சு. ஐயர், 1925-ஆம் ஆண்டு, 44-வது வயதில் ஒரு விபத்தில் காலமானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here