படித்ததில் பிடித்தது 1

1
218

ஒரு நாள் ஒரு ஊருக்குச் சென்றபோது, இந்த ஊரில் பொய் பேசாதவர் யாராவது உண்டா? என்று கேட்டபோது, சுப்ரமணியன் என்பவரது வீட்டை காட்டினார்கள்.

”அதோ அந்த மாடி வீட்டுதான். நல்லவர், சாது, பக்தர். லட்சாதிபதி. நான்கு பிள்ளைகள்” அவர் வீட்டுக்கு யோகி சென்றதும் உட்கார்ந்திருந்த சுப்பிரமணியன் உடனே எழுந்தார். ஓடி வந்து ஞானி முன் விழுந்து வணங்கினார். அவரை ஆசனத்தில் அமர்த்தினார், ஐயா, இங்கு உணவு அருந்தவேண்டும் ” என வேண்டினார். அவருடைய அன்பு, பணிவு, அடக்கம் முதலிய நற்குணங்களைக் கண்டதும் யோகிக்கு பிடித்துவிட்டது. ஆனால் அவர் உண்மையாளரா என்று சோதித்து விட்டு அப்புறம் உணவு அருந்தலாம் என்று எண்ணினார். பேச்சு கொடுத்தார்.

“உங்களிடம் எவ்வளவு செல்வம் உண்டு?” “சுவாமி! ரூபாய் 22,000/- உண்டு”

*குழந்தைகள் எத்தனை பேர்?”“சுவாமி! ஒரே புதல்வன் தான்”

“உமக்கு வயது என்ன?”

“சுவாமி! எனக்கு வயது 4 வருஷம்.

சாமியாருக்கு கோபம் வந்தது.

இவரைப் போய் பொய் பேசாதவர் என்கிறார்களே?”.

எனவே கோபத்தோடு பேசினார்.

“ எதற்கு ஒன்றுமில்லாத விஷயத்துக்கு புளுகுகிறீர்கள். நீர் பேசுவ தெல்லாம் நம்பும்படியாக இல்லையே. இங்கு நான் உணவு பூசித்தால், அது என் தவத்தை அழித்து என் குணத்தை மாற்றிவிடும். நான் பொய் சொல்கிறவர்கள் வீட்டில் புசிப்பதில்லை.” சாமியார் எழுந்தார்.

சாமியார் காலில் விழுந்து, “ சாமி, நான் பொய் பேசவில்லை. சத்தியம் சொல்கின்றேன். சற்று நிதானமாக ஆராய்ந்து பார்த்து உண்மை உணரவேண்டும்” என்று சொல்லி தனது வரவு செலவு கணக்கு புத்தகத்தை எடுத்துக் காட்டினார்.

அதில் இருப்புத் தொகை ஒரு லட்சம் ரூபாய் என்று இருந்தது.

“முதலியார், உங்கள் கணக்குப் புத்தகமே ” உமது சொத்து ஒரு லட்சம் ரூபாய் என்று காட்டும்போது எப்படி நீங்கள் என்னிடம் 22,000 ரூபாய் என்று பொய் சொன்னீர்கள்.?
“சுவாமி! ஒரு லட்ச ரூபாய் பெட்டியில் உள்ளது என்றாலும் பெட்டியில் உள்ள பணம் எனதாகுமா? இதோ பாருங்கள், நான் செய்த தருமக் கணக்கில் இதுவரை 22,000 ரூபாய் தான்; செலவழிந்துள்ளது. தருமம் புரிந்த பணம்தானே என்னுடையது? இப்போதே நான் இறந்தால் பெட்டியில் உள்ள இந்த லட்ச ரூபாய் என்னுடன் வராதே. என்னோடு வருவது நான் செய்த தருமம் ஒன்று தானே அது 22000 ரூபாய் தானே. அது தான் என் சொத்து.” என்று சொன்னேன்.

சாமியார் ”ஆஹா என்று சந்தோஷமாக தலையாட்டினார். ‘ உங்களுக்கு நாலு பிள்ளைகள் இருக்கும்போது ஏன் ஒன்று என்று சொன்னீர்?. ”சுவாமி! எனக்குப் பிறந்தது 4 பிள்ளைகள். உண்மையில் ஒருவன் தான் என் பிள்ளை ” ”முதலியார் என்ன சொல்கிறீர்கள் நீங்கள்? “சுவாமி! இதோ விளக்குகிறேன். முதலியார் ” ” மகனே! நடேசா ” என கூப்பிட்டார். ”அப்பா நான் சீட்டு விளையாடுகிறேன். கொஞ்ச நேரம் கழித்து வருகிறேன்” என்று பதில் வந்தது. “மகனே! வடிவேலா” என முதலியார் குரல் கொடுத்தார். “ஏன் இப்படிக் கத்தறே , வாயை மூடிக்கொண்டிரு” என்று ஒரு குரல் பதிலாக வந்தது. “என் மகனே! சிவராஜா என்று ஒரு குரல் கொடுத்தார் முதலியார். ” உன்னோடு பேச என்னால் ஆகாது, என்று கோபமாக கத்துவது காதில் விழுந்தது. ”அப்பா குமரேசா ” என்று ஒரு முறை முதலியார் கூப்பிட்ட கணமே ஒரு பையன் ஓடிவந்தான். அப்பாவையும், எதிரே இருந்த சாமியாரையும் தொழுது வணங்கினான்.

முதலியார் சாமியாரிடம் “ சுவாமி! அந்த மூவரும் என் புதல்வர்களா? என் கருத்துக்கு முரண் ஆனவர்கள் என் பிள்ளைகளா? போன பிறப்பில் நான் செய்த பாவங்களின் உருவங்கள். இவன் ஒருவன் தான் என் பிள்ளை” என்று கருதுவதால் எனக்கு ஒரு பிள்ளை என்றேன். ”முதலியார் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஏன் உன் வயது விஷயத்தில் நம்பும் படியாக சொல்ல வில்லை? ” “சுவாமி! ஒவ்வொரு நாளும் நான் ஒன்றரை மணி நேரம் தான் வழிபாடு செய்கின்றேன். இறைவனைப் பற்றி நினைக்காத / பேசாத நாள் எல்லாம், பிறவா நாள் தானே? இறைவனைப் பூசிக்கும் நேரம்தான் எனக்குச் சொந்தம். அடியேனுக்கு இந்த உடம்பு பிறந்து அறுபது ஆண்டுகள் ஆயின. ஐந்து வயதிலிருந்து பூசிக்கின்றேன். நாள் ஒன்றுக்கு ஒன்றரை மணி நேரம் பூசை செய்கின்றேன். அந்த வகையாகப் பார்த்தால், அடியேன் பிறந்து அறுபது ஆண்டுகள் ஆனாலும், ”எனக்குச் சொந்தமான வயது 4 வருஷம் தானே” சரியா ஐயா?

முதலியார் நீங்கள் சொன்னது அப்பட்டமான உண்மை.

1.தருமம் செய்த பணம் தான் ஒருவனுக்கு சொந்தம்.

2.தாய்-தந்தை கருத்தை / பேச்சை கேட்கின்றவர்களே மகன் / மகள்

3. இறைவனுக்கு பூசை செய்த நேரமே ஒருவனின் நேரம்.

உங்கள் வீட்டில் உணவு உண்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று வாழ்த்தினார் சாமியார்.*

இந்த கதையை ஒரு நிகழ்ச்சியில் சொன்னவர் திருமுருக கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள்

வாழ்க வளமுடன்!

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here