நூற்றாண்டு காணும் மாப்ளா கலவரம் – புத்தக விமர்சனம்

1
958

இன்றைய நிகழ்வு நாளைய சரித்திரம், நேற்றைய சரித்திரம் நாளைய பாடம். எனவே சரித்திரம் திரிக்கப்படாமல் உண்மையாகச் சொல்லப்படவேண்டும். 1921 ஆகஸ்டு 21 ம்தேதி துவங்கிய மாப்ளா கலவரம் சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதி என்று காங்கிரசும் நிலச்சுவான்தாரர்களை எதிர்த்து கூலித்தொழிலாளர்கள் நடத்திய கிளர்ச்சி என்று கம்யூனிஸ்டுகளும் அவரவர் கண்ணோட்டத்தில் கூறிவந்த நிலையில் மாப்ளா கலவரத்தின் சரியானப் பின்னணியை அலசி ஆராய்ந்து திரு. ஸ்தாணுமாலயன்ஜி ஒரு புத்தகமாக வெளியிடுகிறார். பாராட்டுக்கள்.

தெய்வத்தின் சொந்த நாடான கேரளாவில் அப்பாவி இந்து பெரும்பான்மையினருக்கு எதிராக இஸ்லாமிய சிறுபான்மையினர் கட்டவிழ்த்துவிட்டதுதான் மாப்ளா கலவரம் என்பதை சரித்திர ஆதாரங்களோடு ஆசிரியர் நிரூபித்துள்ளார். மாப்ளா கலவரத்தின் மீது கிலாபத் இயக்கம் ஏற்படுத்திய தாக்கமும் பொருத்தமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மதமாற்ற முயற்சியின்போது இந்து கோயில் இடிப்பு, பசுவதை, கற்பழிப்பு, சொத்துக்கள் சூறையாடல் ஆகிய நிகழ்வுகளால் ஹிந்துக்கள் அனுபவித்த சொல்லவொண்ணாத் துயரங்களை உருக்கமாக விவரித்த நூலாசிரியர் கலவர சமயத்தில் சொத்துக்களையும் சொந்த பந்தங்களையும் இழந்து தவித்த ஹிந்துக்களுக்கு பாரதத்தின் பல பகுதியிலிருந்து ஈரநெஞ்சோடு மக்கள் அளித்த உதவிகளையும் அழகாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

நூற்றாண்டு காணும் மாப்ளா கலவரத்தின்போது கேரள மக்களின் மனதில் ஏற்பட்ட ரணங்களையும், உண்மை செய்திகளையும் தமிழக மக்கள் உணரவேண்டும் என்பதே ஆசிரியரின் உண்மையான நோக்கம். கலவரம் ஓய்ந்தபின் மதம் மாற்றப்பட்டவர்களை தாய்மதம் திருப்பும் ஆரிய சமாஜத்தின் முயற்சிகளும் பாராட்டப்பட்டுள்ளன. ஏகம் சத் விப்ரா பஹுதா வதந்தி, அனைவருள்ளும் ஒரே இறைவன் குடிகொண்டுள்ளான் என்கிற இந்து தர்மத்தின் விசாலமானப் பார்வையை புத்தகத்தின் நிறைவு பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது நல்ல முடிவுரையாகும். சிரிய விஷயங்களை எளிய நடையில் தொடர்ந்து படிக்கவேண்டும் என்ற ஆவலை தூண்டும் வகையில் திரு. ஸ்தாணுமாலயன்ஜி அவர்களின் எழுத்துத்திறன் அமைந்துள்ளதை போற்றுகிறேன். சங்கரன் நாயர் எழுதிய Gandhi and Anarky. ராம்கோபால் எழுதிய Indian Muslims, லி.பி. குல்கர்னி எழுதிய India & Pakisthan, Dr. Ambedkar எழுதிய Partition and Pakisthan மேலும் Bloodiest Episode in Histroy ஆகியப் புத்தகங்கள் இவருக்கு சரியான செய்திகளை வழங்கியுள்ளன.

மதம், ஜாதி, மொழி ஆகிய வேறுபாடுகளை மறந்து நாம் அனைவரும் ஒரே தேசத்தைச் சேர்ந்தவர்கள். ஒற்றுமையாக வாழ்ந்து தேச நலனில் நாட்டம் கொள்வோம் என்ற உணர்வை இப்புத்தகம் வாயிலாக உணர்வோமாக!

டாக்டர் கே. குமாரசாமி,
மாநிலத் தலைவர்
ஆர்.எஸ்.எஸ். வட தமிழ்நாடு

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here