ஒற்றுமையே நமது பலம்

0
571

ஆர்.எஸ்.எஸ் தலைவர் டாக்டர் மோகன் பாகவத், ஜம்மு காஷ்மீரில் தனது நான்கு நாள் சுற்றுப் பயணத்தின் நிறைவு நாளில், ஜம்மு அம்பாலாவில் உள்ள கேஷவ் பவனில் இருந்து நடைபெற்ற இணையவழி சந்திப்பில் ஸ்வயம் சேவகர்களிடம் உரையாற்றினார். ஜம்மு காஷ்மீரை சேர்ந்த ஸ்வயம்சேவகர்கள், 989 இடங்களில் இருந்து இந்த மெய்நிகர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

அவரது உரையில், ஆர்.எஸ்.எஸ் உருவாக்கம் முதல் உலகம் முழுவதும் உள்ள அதன் விரிவாக்கம்வரையிலான பல்வேறு தலைப்புகளில் ஸ்வயம்சேவகர்களுக்கு வழிகாட்டினார்.

அவர் பேசுகையில், ‘வரும் 2025ம் ஆண்டில், ஆர்.எஸ்.எஸ் அதன் 100வது ஆண்டை நிறைவு செய்யப் போகிறது. அதனை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் தனது செயல்பாடுகளை துரிதப்படுத்த வேண்டும். நூற்றாண்டு விழா கொண்டாடப்படும்போது அனைத்து கிராமங்களிலும் ஷாகா விரிவாக்கத்துடன் ஸ்வயம் சேவகர்கள் ஒவ்வொரு வீட்டையும் சென்றடைய வேண்டும் என்பதை உறுதிப்படுத்த நாம் கடுமையாக உழைக்க வேண்டும். அதுவே ஸ்வயம்சேவகர்களின் இலக்காக இருக்க வேண்டும். ​​

கடந்த 96 ஆண்டுகளாக நாம் இதே வேலையைச் செய்து வருகிறோம். கவனத்தை திசை திருப்பாமல் நாம் அதை இன்னும் அதிக ஆர்வத்துடன் செய்ய வேண்டும். நமது ஒற்றுமை மூலமே நமது பலம் உணரப்படும். எனவே, நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். பாரதத்தை ஒரு விஷ்வ குருவாக மாற்ற நாம் முழு ஹிந்து சமுதாயத்தையும் ஒன்றிணைக்க வேண்டும்.

உலகின் ஒவ்வொரு துறையிலும் பாரதம் முன்னணியில் இருக்க வேண்டும். நாம் உலகம் முழுவதையும் வழிநடத்தும் நிலையில் இருக்க வேண்டும். அத்தகைய நாட்டை நாம் உருவாக்க வேண்டும். அதுவே நமது இறுதி இலக்காக இருக்க வேண்டும். வேலை இப்போதுதான் தொடங்கியுள்ளது, முடிக்கப்படவில்லை. எனவே, பொறுமையுடன் பணியாற்றுவது முக்கியம்.

ஸ்வயம்சேவகர்கள் ஷாகாக்களில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். ஏனெனில் உடல், அறிவு மற்றும் அமைப்பு ரீதியாக நாம் வலுவாக இருப்பது அவசியம். ஒவ்வொரு ஸ்வயம்சேவகரும் தனது கடமையை அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும். ஒரு ஸ்வயம்சேவகர் முழு சமுதாயத்திற்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டும்’ என கூறினார்.

மேலும், அவர் ஸ்வயம்சேவகர்களுக்கு, நாக்பூரில் சங்கத்தின் ஆரம்ப காலத்தில் ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் டாக்டர் ஹெட்கேவாரின் வாழ்க்கை உதாரணங்கள், குணாதிசயங்கள், ஆளுமை உருவாக்கத்தின் அவசியம், ஸ்வயம்சேவகர்களின் வாழ்க்கை, கடமை, எண்ணம், செயல் போன்ற பல்வேறு குணாதிசயங்களை கட்டமைப்பதற்கான ராமாயண உதாரணங்கள், தேசத்தின் முன்பு தற்போது உள்ள சவால்கள் போன்றவற்றையும் விவரித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here