தெற்கிலிருந்து துவங்கியது சனாதன தர்மம்

0
152

காவிரி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள சத்குரு தியாகராஜரின் சமாதி வளாகத்தில், தியாகராஜர் மறைந்த புஷ்ய பகுல பஞ்சமி திதியில் ‘ஸ்ரீ தியாக பிரம்ம மகோத்சவ சபை’ சார்பில், ஆண்டுதோறும் இசை ஆராதனை விழா நடத்தப்படுவது வழக்கம். அவ்வகையில், இந்த ஆண்டுக்கான 176வது ஆண்டு ஆராதனை விழா கடந்த 6ம் தேதி தொடங்கியது. இந்த விழாவை தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார். இதனையடுத்து நடைபெற்ற விழாவில் தினமும் காலை 9 மணி முதல் இரவு 10.20 மணி வரை ஏராளமான இசைக்கலைஞர்கள் பாடியும், இசைத்தும் தியாகராஜ சுவாமிகளுக்கு இசை அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆராதனை விழா நேற்று தினம் நடைபெறுகிறது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கலந்து கொண்டு விழாவை தொடக்கி வைத்தார். விழாவில் பேசிய ஆளுநர், “பொருளாதாரம், ராணுவம், ஆன்மீகத்தில் பாரதம் வலிமையாக இருக்கிறது. பயங்கரவாதம் உள்ளிட்டவற்றில் இருந்து மக்களை காக்க உலகத்திற்கு பாரதம் ஒளியாக இருக்கிறது. 18ம் நூற்றாண்டுக்கு முன் நமது பாரதம் உலகத்துக்கே தலைமை தாங்கக்கூடிய வல்லரசாகத் திகழ்ந்தது. நாமெல்லாம் சோழ வம்சத்தினர். இன்னும் 25 ஆண்டுகளில் நமது நாடு உலக அளவில் தலைமை தாங்கும் நிலை உருவாகும். உலக நாடுகளில் பாரதம் முதன்மை நாடாகவும், தலைமை வகிக்கும் நாடாகவும் திகழும். உலகத்தின் விஸ்வகுருவாக பாரதம் விளங்குகிறது. இந்த தேசம் வலிமைமிக்க ஆட்சியாளர்களால், சர்வாதிகாரிகளால் உருவாக்கப்பட்டது அல்ல. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ரிஷிகள், முனிவர்களால் உருவாக்கப்பட்டது. நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்பதே பாரதம். சனாதன தர்மத்தால் மட்டுமே இது சாத்தியமானது. பாரதத்தின் கலாச்சார அடையாளம் ராமர். நம் ஒவ்வொருவர் இதயத்திலும் ராமர் வாழ்கிறார்.காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மக்களை ராமர் ஆன்மீகத்தால் இணைத்துள்ளார். உங்களில் என்னையும், என்னில் உங்களையும் காண்பது தான் சனாதன தர்மம். சனாதன தர்மம் என்பது தெற்கிலிருந்து தான் துவங்கியது. இந்த சனாதனம் தான் பாரதத்தை தோற்றுவித்தது. அதுவும் குறிப்பாக, தமிழகத்தில் இருந்து தான் துவங்கியது. பக்தி தான் மிகப்பெரிய சக்தி வாய்ந்த ஊடகமாக திகழ்கிறது. இந்த பக்தி மூலம் தான் தியாகராஜ சுவாமிகள் ஏராளமான கீர்த்தனைகளை பாடி இறைவனை அடைந்தார். இவரை போன்ற பக்தர்களால் தான் பாரதம் உருவாக்கப்பட்டது. ராமபிரான் மீதான பக்தி நாடு முழுவதும் நிலவுகிறது. இதனால், நமது பாரதம் ஆன்மீக பூமியாக திகழ்கிறது” என தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here