வேல் சிலையை அகற்றிய தி.மு.க அரசு

0
86

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாவது படைவீடான பழனி மலை முருகன் கோயிலில் தைப்பூச உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும். தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா என பிற மாநில பக்தர்களும் முருகனுக்கு மாலை அணிந்து தைப்பூச தினத்தன்று தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவார்கள். அப்போது, முருகன் கோயிலை ஒட்டியுள்ள சண்முகநதியில் நிறுவப்பட்டிருக்கும் 24 அடி உயரமுள்ள வேல் சிலைக்கும், பக்தர்கள் வழிபாடு நடத்துவது வழக்கம். கடந்த நான்கு ஆண்டுகளாக மெய்த்தவம் பொற்சபை உள்ளிட்ட சில தன்னார்வ அமைப்புகளை சேர்ந்த பக்தர்கள் சண்முகநதி தூய்மைப்பணி மற்றும் சண்முகநதி ஆராத்தி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, தைப்பூசத்தின்போது 24 அடி உயரமுள்ள பித்தளை வேல் சிலையை அங்கு நிறுவி, தைப்பூச திருவிழா முடிந்த பிறகு அதனை அகற்றி விடுவது வழக்கம். அவ்வகையில், தைப்பூசத்தை முன்னிட்டு ஒரு வாரத்துக்கு முன்பு சண்முகநதியில் அவர்கள் வேல் சிலையை நிறுவினர். மாவட்ட நிர்வாகத்திடம் தைப்பூசத் திருவிழா முடிந்த பிறகு பிப்ரவரி 7ம் தேதிவேலை அகற்றி விடுவதாக தெரிவித்திருந்தனர். ஆனால், கடந்த 1ம் தேதி அங்கு வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், அன்று மாலைக்குள் வேல் சிலையை அகற்ற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் நாங்களே வேல்சிலை அகற்றுவோம் என்று தெரிவித்தனர். இது தொடர்பாக வழிபாட்டுக் குழுவினர் ஆலோசனை நடத்தி வந்தனர். ஆனால், திடீரென 2ம் தேதி அதிகாலை காவலர்கள் பாதுகாப்போடு அங்கு வந்த அதிகாரிகள், பொக்லைன், கிரேன்களை கொண்டு சிலையின் பீடத்தை தகர்த்து வேல் சிலையை அகற்றினர். இதைத் தடுக்க முயன்ற மெய்த்தவம் பொற்சபை நிறுவனர் மெய்த்தவ அடிகளாரையும் காவலர்கள் கைதுசெய்து அழைத்துச்சென்று காவலில் வைத்துவிட்டனர்.  சண்முகநதியில் பக்தர்கள் வழிபாட்டுக்காக நிறுவப்பட்டிருந்த வேலை ஹிந்து விரோத தி.மு.க அரசு இப்படி அராஜகமாக அகற்றியது பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சமீபத்தில் மதுரையில் நடந்த திராவிடர் கழக மாநாட்டில் பேசிய தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு, தனது தொகுதியில் இருந்த பார்வதி, லட்சுமி, சரஸ்வதி கோயில்களை இடித்ததாக பெருமையுடன் கூறியது நினைவு கூரத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here