ஆதி மகோத்சவம் 2023

0
52

நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் பங்காற்றிய பழங்குடி மக்களுக்கு மதிப்பளிக்கும் வகையில், அவர்களது நலன்களுக்கான நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, பழங்குடியினத்தின் கலாசாரங்களை தேசிய அளவில் காட்சிப்படுத்தும் முயற்சியாக, ஆதி மகோத்சவம் என்ற பெயரிலான மெகா தேசிய பழங்குடியின திருவிழா, டெல்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் தேசிய அரங்கத்தில் நேற்று தொடங்கியது. இதனை பிரதமர் மோடி தொடங்கி வைத்ததார். இந்நிகழ்ச்சியில் பழங்குடி கலாசாரம், கைவினை பொருட்கள், உணவு பொருட்கள், வர்த்தகம் மற்றும் பாரம்பரிய கலை ஆகியவை காட்சிப்படுத்தப்பட உள்ளன. மத்திய பழங்குடியின விவகாரங்களுக்கான அமைச்சகம் சார்பில் பிப்ரவரி 27ம் தேதி வரை நடத்தப்படுகிறது. இந்த மகோத்சவத்தில் ஆயிரக்கணக்கான பழங்குடியின கலைஞர்கள் பங்கு கொள்கின்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், “21ம் நூற்றாண்டு என்பது அனைவருக்குமான ஆதரவு, அனைவருக்குமான வளர்ச்சி என்ற மந்திரத்துடன் நடைபோடுகிறது. இந்த உள்ளுணர்வின்படி ஆதி மகோத்சவம் நிகழ்ச்சி முக்கியத்துவம் பெறுகிறது. பழங்குடியின மக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கான தேவையை அதிகரிக்க செய்ய வேண்டும் என்பதை உறுதி செய்ய தொடர் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. ஆதி மகோத்சவம் போன்ற பழங்குடி சமூகத்துடன் தொடர்புடைய 8 முதல் 9 நிகழ்ச்சிகள் நாட்டின் பிரசாரத்தில் ஒன்றாகவே மாறி விட்டது. இதுபோன்ற பல நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியாகவே நானும் மாறி விட்டேன். இதனால், பழங்குடி சமூக வளர்ச்சி மற்றும் நலன் என்பது எனது சொந்த உணர்வு சார்ந்த விஷயமாக மாறிவிட்டது. குஜராத்திலும் பழங்குடியின் சகோதர, சகோதரிகளுக்கு சேவை செய்திருக்கிறேன். நமது கலாசாரம், பாரம்பரியம் உள்ளிட்டவை குறித்து பழங்குடி சமூகத்தின் வாழ்க்கை முறை எனக்கு நிறைய கற்று தந்துள்ளது. அவர்களது பொருட்கள் சந்தையில் அதிகம் சென்றுசேர வேண்டும். அவர்களுக்கான அங்கீகாரம் அதிகரிக்கப்பட வேண்டும். அதனை நோக்கியே மத்திய அரசு தொடர்ந்து செயலாற்றி வருகிறது நாட்டின் பல்வேறு மாநிலங்களில் 3,000த்திற்கும் மேற்பட்ட, வனம் சார்ந்த பொருட்களுக்கான வளர்ச்சி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. வனம் சார்ந்த 90 சிறிய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையையும் அரசு வழங்கி வருகிறது” என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here