ஜெய்ஹிந்த் செண்பகராமன்

0
114

15-9-1891 ல் திருவனந்தபுரம் புத்தன்சந்தை என்ற ஊரில் பிறந்தார். அவரது பெற்றோர் சின்னசாமி பிள்ளை-நாகம்மா. இவர் திருவனந்தபுரத்தில் வசித்த காலத்தில் ஒரு ஜெர்மானியர் இவருக்குப் பழக்கமானார். அவருடன் 1908ஆம் ஆண்டு ஜெர்மனிக்குச் சென்றார். இந்தியர்களைக் கொண்ட ஒரு அமைப்பை ஜெர்மனியில் அமைத்தார். அதன் பெயர் “Indian National Volunteers”. இவர்தான் முதன் முதலில் தாய்நாட்டை வணங்க “ஜெய் ஹிந்த்” எனும் கோஷத்தை உருவாக்கி முழங்கினார். முதல் உலகப்போரில் ஜெர்மானிய நீர்மூழ்கிக் கப்பல்கள் பிரிட்டிஷாரின் கப்பல்களை உடைத்தெறியத் தொடங்கின. அப்படிப்பட்டதொரு கப்பல் “எம்டன்” எனும் பெயரில் சென்னை கடற்கரைக்கு வந்து சென்னை மீது குண்டுகளை வீசியது. இப்போதைய உயர்நீதி மன்ற வளாகத்தில்கூட ஒரு குண்டு விழுந்தது. அந்த கப்பலில் தலைமை இன்ஜினீயராக வந்தவர் செண்பகராமன் பிள்ளை. அடால்ப் ஹிட்லர் இந்தியாவையும் இந்தியர்களையும் கேவலமாகப் பேசியதை, வன்மையாகக் கண்டித்து, எழுத்து மூலம் ஹிட்லரை மன்னிப்பு கேட்க வைத்தார். செண்பகராமன் உடல் நலம் குன்றியது. தீவிர சிகிச்சை பெற்றும் பலனளிக்கவில்லை. செண்பகராமனின் வாழ்க்கை முடிவை நெருங்கியது. 26-5-1934-ல் அவர் மனைவி லட்சுமிபாய் மடியில் அவர் உயிர் பிரிந்தது. சாகும் தருவாயில் தன் மனைவியிடம் இரு கோரிக்கைகள் வைத்தார். செண்பகராமன் இறந்தபிறகும் அவர் மனைவி இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட வேண்டும். தனது சாம்பலை எடுத்து கரமணை ஆற்றில், அவர் பிறந்த நாஞ்சில் நாட்டு வயல்களில் தூவ வேண்டும். இந்தியாவின் முதல் போர்க் கப்பல் மூலம் 1966-ல் சாம்பல் எடுத்துவரப்பட்டு, அவரது மனோரதம் நிறைவேறியது. அந்த மாவீரனின் அஸ்தி இந்திய மண்ணில் ஐக்கியமானது.

வாழ்க வீரன் செண்பகராமன் புகழ்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here