கேரள மாநிலம் ஆலப்புழையில் ஏப்ரல் 4,1855ஆம் ஆண்டு பிறந்தவர். தந்தையிடம் தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட சமய நூல்களைக் கற்றார். 1876-ல் பி.ஏ. பட்டம் பெற்றார்.நாகப்பட்டினம் நாராயணசாமி பிள்ளை இவரது தமிழ் ஆசிரியர். இந்துக் கல்லூரியாக உயர உறுதுணையாக இருந்தார்.. திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் தத்துவத் துறை ஆசிரியராகச் சேர்ந்தார். எம்.ஏ. தத்துவத்தில் பட்டம் பெற்றார். மகாராஜா அரண்மனையின் வருவாய்த் துறை தனி அலுவலராக நியமிக்கப்பட்டு, இறுதிவரை அங்கு பணியாற்றினார். சிறந்த படைப்பாளி. இந்திய, மேற்கத்திய தத்துவம் தவிர, வரலாறு, தொல்பொருளியல், இலக்கியம், நவீன அறிவியல் ஆகிய துறைகளிலும் ஆர்வம் கொண்டிருந்தார். ‘நூற்றொகை விளக்கம்’, ’திருவிதாங்கூர் பண்டைய மன்னர்கால ஆராய்ச்சி’ உட்பட 20-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். ‘மனோன்மணியம்’ என்ற நூலை 1891-ல் எழுதினார். கவிதை நாடக வடிவில் அமைந்த மனோன்மணியம், 4,500 வரிகள் கொண்டது. அதில் ‘நீராருங் கடலுடுத்த’ எனத் தொடங்கும் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக தமிழக அரசு 1970-ல் அறிவித்தது. ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். ‘தமிழ் இலக்கிய வரலாற்றில் சில மைல்கற்கள் (திருஞான சம்பந்தரின் காலம்)’ என்ற ஆங்கில நூலை எழுதினார். பத்துப்பாட்டு பற்றிய திறனாய்வு நூலை ஆங்கிலத்தில் எழுதினார். பத்துப்பாட்டின் 3 அங்கங்களான திருமுருகாற்றுப்படை, நெடுநல் வாடை, மதுரைக் காஞ்சி ஆகியவற்றை ‘தி டென் தமிழ் ஐடியல்ஸ்’ என்ற நூலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ‘ஜீவராசிகளின் இலக்கணமும் பிரிவும்’, ‘மரங்களின் வளர்ச்சி’, ‘புஷ்பங்களும் அவற்றின் தொழில்களும்’ ஆகிய அறிவியல் நூல்களை எழுதினார்.
கல்வெட்டு ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டார். திருவிதாங்கூர் அரசர்களின் மரபு பற்றி ஆராய்ந்து எழுதிய நூலை 1894-ல் வெளியிட்டார். மற்ற மொழிகளையும் இவர் ஒதுக்கியதில்லை. திருவனந்தபுரத்தில் சைவப்பிரகாச சபையைத் தோற்றுவித்து சமயத் தொண்டும் ஆற்றிவந்தார். ‘ராவ் பகதூர்’ உள்ளிட்ட பல பட்டங்கள் பெற்றுள்ளபோதிலும், தான் எழுதிய நூலின் பெயரால் ‘மனோன்மணியம்’ சுந்தரம் பிள்ளை என்று போற்றப்பட்டார்.