சென்னை பூந்தமல்லியில் ஏப்ரல் 4,1912 ஆம் ஆண்டு பிறந்தார். சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலைப் பொருளாதாரம் பயின்றார். 1981-ல் தஞ்சாவூரில் தமிழ் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டபோது, அரிய கையெழுத்து சுவடித் துறையின் முதல் தலைவராகப் பொறுப்பேற்று 5 ஆண்டுகள் பணியாற்றினார். சமஸ்கிருதம், இந்திய மொழிகள் ஆய்வு நிறுவனத்தில் மூன்றரை ஆண்டுகள் ஆராய்ச்சியாளராக செயல்பட்டார். அப்போது பன்மொழி இலக்கண ஒப்பீட்டு ஆய்வுகளை மேற்கொண்டார்.
சைவ சமய சொற்பொழிவாளராகவும் புகழ்பெற்றார். திருமுறைகளில் புலமை பெற்றவர். இவரது பெரும்பாலான ஆய்வுகள் அதையொட்டியே இருந்தன. இலக்கணம், இலக்கியம், கல்வெட்டு, வரலாற்றுப் புலமை, தெலுங்கு, சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார். திருப்பனந்தாள் காசிவாசி சுவாமிநாத சுவாமிகள் செந்தமிழ்க் கல்லூரியின் முதல் முதல்வராகப் பொறுப்பேற்று 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர். இவர் படைத்த சிவனருள் திரட்டு நூலில் 500 பாடல்களுக்கு உரையும் ஆங்கில மொழிபெயர்ப்பும் செய்துள்ளார்.
ஏராளமான தமிழ் அறிஞர்களை உருவாக்கியுள்ளார். இலக்கியக் கேணி, கல்லெழுத்துக்களில், சோழர்கால அரசியல் தலைவர்கள், ஆய்வுப் பேழை, நீத்தார் வழிபாடு, திருக்குறள் சமணர் உரை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட அரிய நூல்களைப் படைத்துள்ளார். தஞ்சை மராட்டிய மன்னர்களின் வரலாற்றை அக்காலச் சமுதாய வரலாற்றுடன் சேர்த்து ஆராய்ந்து முழுமையாக வெளியிட்டார். காரைக்கால் அம்மையார் எழுதிய அற்புதத் திருவந்தாதிக்கு குறிப்புரை எழுதி 1949-ல் பதிப்பித்தார். சமரசம் செய்துகொள்ளாத, கண்டிப்பான நிர்வாகத் திறன், நேர்மை, நல்லொழுக்கம், பக்தி, உதவும் பண்பு, நன்றி மறவாமை என அத்தனை நல்ல பண்புகளையும் கொண்டிருந்தார். இவரது பல நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. சிவநெறிச் செல்வர், கல்வெட்டு ஆராய்ச்சிப் புலவர், செந்தமிழ்க் கலாநிதி, தமிழ் மாமணி உள்ளிட்ட பல்வேறு பட்டங்களைப் பெற்றார். இறுதிவரை தமிழ்த் தொண்டு ஆற்றிவந்த கா.ம.வேங்கடராமையா 83-வது வயதில் (1994) மறைந்தார்.