கோயில்களின் பெயர்களில் போலி இணையதளங்கள்

0
116

சென்னை உயர் நீதிமன்ற கிளையில்ராமநாதபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மற்றும் மார்கண்டன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் முக்கிய கோயில்களின் பெயர்களில் செயல்படும் இணையதளங்களை முடக்கவும், அந்த இணையதளங்களை நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்தனர். மனுக்களில், சென்னை கபாலீஸ்வரர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், தஞ்சை பெரிய கோயில், பழனி முருகன் கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் உள்ளிட்ட பல முக்கிய கோயில்களில் பெயரில் பலர் போலி இணையதளங்களை தொடங்கி பணம் வசூலிக்கின்றனர். அந்த இணையதளங்கள் கோயில் பெயர்களில் இருப்பதால் கோயிலுக்கு சொந்தமானது என நினைத்து மக்கள் பணம் அளிக்கின்றனர். இதுபோன்ற போலி இணையதளங்களை முடக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் அடங்கிய அமர்வு, “தமிழகம் முழுவதும் கோயில் பெயர்களில் இயங்கும் அங்கீகரிக்கப்படாத, சட்டவிரோதமான போலி இணைதளங்களை முடக்க வேண்டும். அந்த இணையதளங்கள் மூலமாக இதுவரை எவ்வளவு பணம் வசூலிக்கப்பட்டுள்ளது என்பதை சைபர் கிரைம் காவல்துறையினர் அந்த தொகையை பறிமுதல் செய்ய வேண்டும். கோயில்களின் அங்கீகரிக்கப்பட்ட இணையதள முகவரியை தகவல் தொழில்நுட்பத்துறை மூலம் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதன் வழியாக மட்டுமே பூஜைகள், நன்கொடை வழங்குவது உள்ளிட்டவைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில்களில் உண்டியல் வைத்து அதில் காணிக்கை செலுத்தவும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட இணையதளங்கள் வழியாக காணிக்கை செலுத்தவும் பக்தர்களை அறிவுறுத்த வேண்டும்.

இத்தகைய போலி இணையதளங்கள் குறித்து புகார்கள் வந்தால் உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி இணையதளங்களை இயக்குவோர் மீது உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பதி, சபரிமலை கோயில்களை போல தமிழக கோயில்களின் செயல்பாடுகளும் முறையாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். போலி இணையதளங்கள் குறித்து புகார் அளிக்க தனி அலுவலரை நியமிப்பதோடு, அதற்காக தனி தொலைபேசி எண்ணையும் உருவாக்க வேண்டும். போலி இணையதளங்களை நடத்தியவர்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் சேவைகளுக்கான கட்டணம் கோயில் நிர்வாகத்தால் வசூலிக்கப்படும் என்றால் அதற்குரிய ரசீதுகள் கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும். அர்ச்சகர்கள், போட்டோகிராபர்கள், வழிகாட்டிகள், அலுவலர்களுக்கு உரிய அடையாள அட்டைகள் வழங்க வேண்டும். இதனால் மூன்றாவது நபர்கள் கோயிலுக்குள் கட்டணம் வசூலிப்பது தடுக்கப்படும். இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயிலுக்குள் நடைபெறும் செயல்பாடுகள் அனைத்தையும் முறைப்படுத்த வேண்டும். ஹிந்து சமய அறநிலையத்துறை ஆனையர் அதனை கண்காணித்து சட்ட மீறல்கள் இருப்பின், உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். இந்த உத்தரவுகளை முறையாக நடைமுறைப்படுத்தியது தொடர்பாக 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here