மகாதேவ தேசாய்

0
117

குஜராத் மாநிலம் சூரத் அடுத்த சரஸ் என்ற கிராமத்தில் ஜனவரி 01,1892 ஆம் ஆண்டு பிறந்தவர். தந்தை ஆசிரியர். இளம் வயதிலேயே அறிவுக்கூர்மை மிக்க மாணவராக விளங்கினார். 1910-ல் பம்பாய் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். அசாதாரண நினைவாற்றல், அபார புத்திக்கூர்மை கொண்டிருந்தார். இவரது கையெழுத்து மிகவும் அழகாக இருக்கும். குஜராத் இலக்கியங்களை ஆர்வத்துடன் படித்தார். ராமாயணம், மகாபாரதம், கீதை, உபநிடதங்கள் கற்றார். 1913-ல் சட்டப் படிப்பில் பட்டம் பெற்று, சிறிதுகாலம் வழக்கறிஞர் தொழில் செய்தார். மகாத்மா காந்தியை 1917-ல் சந்தித்தார். அவரது கொள்கைகளால் கவரப்பட்டார். அலகாபாத் சென்றவர் அங்கு மோதிலால் நேரு நடத்திய ‘இன்டிபென்டன்ட்’ இதழ் வெளியீட்டில் அவருக்கு உதவியாக இருந்தார். 1923-ல் மீண்டும் அகமதாபாத் வந்து, ‘நவஜீவன்’ பத்திரிகையைக் கொண்டுவர காந்திஜிக்கு உதவியாக இருந்தார். சம்பாரண் சத்தியாக்கிரகம், பார்தோலி சத்தியாக்கிரகம், உப்பு சத்தியாக்கிரகம் உள்ளிட்ட பல போராட்டங்களில் கலந்துகொண்டு பலமுறை சிறை சென்றார். 1924 முதல் 1928 வரை காந்திஜி மேற்கொண்ட பாரத் யாத்ராவில் அவருடன் சென்றார். 1931-ல் லண்டனில் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டுக்கும் அவருடன் சென்றார். காந்திஜியின் தனிச்செயலாளர் என்ற முறையில் அவருக்கு மட்டுமல்லாமல் தன்னைச் சுற்றியுள்ள அனைவருக்கும் சேவை செய்தார். கூட்டுவது, துணி துவைப்பது, சமைப்பது, உணவு பரிமாறுவது, நோயாளிகளை கவனிப்பது, கற்றுக்கொடுப்பது என சகல பணிகளையும் முழு மகிழ்ச்சியுடன் செய்துவந்தார். இவர் பல ஆண்டுகாலமாக அன்றாடம் எழுதிவந்த நாட்குறிப்புகள் தொகுக்கப்பட்டு, ‘மகாதேவ் பாய் கீ டைரி’ என்ற பெயரில் 8 பகுதிகளாக வெளிவந்தன. இதில் காந்திஜியின் அன்றாட செயல்பாடுகள், வாழ்க்கைமுறை குறித்து விரிவாக எழுதியுள்ளார். 1942-ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்துகொண்டதால், வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டார். காந்தியடிகளின் நிழலாக, நம்பிக்கைக்குப் பாத்திரமான உற்ற துணையாக, செயலாளராக, அவரது வாழ்க்கைமுறை குறித்த அதிகாரப்பூர்வ எழுத்தாளராக 25 ஆண்டுகாலம் இருந்தார். சிறந்த எழுத்தாளர், சிந்தனையாளர் எனப் போற்றப்பட்ட மகாதேவ தேசாய் சிறையிலேயே மாரடைப்பால் 50-வது வயதில் (1942) மறைந்தார். ‘இவர் ஒருவர் செய்யும் பணிகளை அரை டஜன் செயலாளர்களால்கூட செய்ய முடியாது. 100 வயது வாழ்ந்தவர் செய்யும் பணியை இவர் செய்திருக்கிறார், என்று காந்திஜி இவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.

#mahadevdesai #mahatmagandhi

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here