காஷ்மீரத்தில்பகவத்ஸ்ரீராமானுஜர்

0
326

 

ஆராவாரம் இல்லாது உடையவர் ராமானுஜரின் திருவுருவ விக்ரஹமானது இன்று (07/07/2022) காஷ்மீரத்தின் இதய பகுதியான‌ ஸ்ரீநகரில் ஸ்ரீ யதிராஜ ஜீயர் ஸ்வாமிகள் பாரத உள்துறை அமைச்சர்‌ திரு அமித் ஷா அவர்களை வைத்து பிரதிஷ்டை செய்துள்ளார்

காஷ்மீரத்துக்கும்‌, உடையவர்‌ ராமானுஜருக்கும் என்ன சம்பந்தம்?!

ஹிந்துக்களான நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்

தமிழகம் வேறு வட மாநிலம் வேறு என தொண்டை கிழிய கதறும் அற்பர்களும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்

பாரத நாட்டின் நான்கு திக்கிலும் சங்கர பீடங்களை நிறுவி ஒவ்வொரு பீடத்திற்கும் ஒவ்வொரு தாயார்களை மையப்படுத்தி அங்கு சங்கராச்சார்யார்களை நியமித்தார் ஆதி சங்கரர்

அப்படி காஷ்மீரத்தின் உச்சியில் சரஸ்வதி பீடத்தை நிறுவினார் ஆதிசங்கரர் (தற்பொழுது அந்த பீடம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் சிதிலடைந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது)

வைணவ சம்பிரதாயத்தை தழைக்கச்செய்த உடையவர்‌‌ ராமானுஜர் அப்பொழுது ஸ்ரீரங்கத்தில் ஜீயராக‌ பொறுப்பேற்று ஸ்ரீரங்கம் திருக்கோவில் நிர்வாகத்தை முறைப்படி நடத்த இருபது கொத்து, பத்து கொத்து முறையை ஏற்படுத்திய தருணம்

அவருடைய மானசீக ஆச்சார்யரான ஸ்ரீ ஆளவந்தாருக்கு மூன்று‌ கடைசி ஆசைகள் இருந்தது, தன் காலத்திலே அது முடியாது என்றாலும் தன்‌ சிஷ்யர்‌ ராமானுஜரால் முடியும் என எண்ணி அவரிடம் தன் ஆசைகளை கூறி அதை செய்து முடிக்க அன்புக்கட்டளை விடுத்தார் அவர்

அந்த மூன்று விஷயங்களில் ஒன்று வேத வியாசர் எழுதிய பிரம்ம சூத்திரத்திற்கு விரிவான வியாக்யானம் எழுதி சமுதாயத்திற்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பது

பகவத் உடையவர் தன் ஆச்சார்யானின் கட்டளையை ஏற்று பிரம்ம சூத்திரத்தை அறியும் பொழுது அதற்கு ஏற்கனவே
வேத வியாச பகவானின் சிஷ்யர் ஸ்ரீ‌ போதாயன மஹரிஷி‌ என்பவர் போதாயன விருத்தி என்கின்ற பெயரில் வியாக்யானம் எழுதியிருப்பதும் அதன் மூலமானது சுமார் இரண்டு லட்சம் படிகளை கொண்டது என தெரிய அது எங்கு தேடியும் கிடைக்கவில்லை, அதே சமயம்‌ காஷ்மீரத்தின் ஸ்ரீநகரிலிருந்து 70 கிலோ மீட்டர் தூரம் அமைந்துள்ள நீலம் நதிக்கரையில் உள்ள சாரதா குக்கிராமத்தில் சாரதா பீடத்தில் அதன் சுருக்கமானது 25,000 படிகளை கொண்டுள்ளது என அறிந்து தன் சிஷ்யர்‌ கூரத்தாழ்வாரோடு சுமார் 3 மாத காலம் நடந்தே காஷ்மீரத்திற்கு சென்றார்

காஷ்மீரத்தின் மன்னனை சந்தித்து அவருக்கு மங்களாசாசனம் செய்தார்‌ ராமானுஜர், அவரின் சிஷ்யரான கூரத்தாழ்வான் மன்னனிடம் உடையவரின் திருவுள்ளத்தை தெரிவித்தார், உடனடியாக மன்னர்‌ அங்கிருந்த காவலாளியை‌ அழைத்து ராமானுஜரோடு சென்று சாராதா கிராமத்திலுள்ள சரஸ்வதி திருக்கோவிலில் உள்ள போதாயன‌ சுருக்கத்தை எடுத்து உடையவருக்கு தான் கொடுக்கச்சொன்னதாக பண்டிதர்களிடம் தன் உத்தரவை தெரிவிக்குமாறு கூறினார்

அங்கு சென்று பண்டிதர்களிடம் காவலாளி இதைக்கூற பண்டிதர்கள் அவரிடம் கொடுக்க மறுத்தனர், அது மட்டுமல்லாது இது தங்கள் சொத்து எனக்கூறி ராமானுஜரை‌ திருக்கோவிலை விட்டு வெளியேறுமாறு பணித்தனர்

பிரச்சனை மீண்டும் அரசரிடம் செல்ல அரசர் பண்டிதர்களை அழைத்து பிரம்ம சூத்திரத்தின் சுருக்கத்தை கொடுக்க சொன்னார், ஆனால் பண்டிதர்கள் கொடுக்க முடியாது, மன்னர் சொன்னதன் காரணத்தினால் சூத்திரத்தை ஒரு தடவை வேண்டுமானால் படிக்கட்டும்‌ என கூறினர்

ராமானுஜர் சம்மதிக்க, கூரத்தாழ்வான் அதை‌ முழுவதும் அதே‌ அரசவையில் மன்னர்‌ முன்னிலையில் படித்தார், அப்பொழுது மன்னர் ராமானுஜரை நோக்கி நீர் இதைக்கேட்டதின் சாரம்சத்தை எழுதிக்கொடும், அதை அன்னை‌ சரஸ்வதியின் திருவடியில் சமர்பிப்போம், அன்னை அதை ஏற்றுக்கொண்டால் நீர் சூத்திர‌ சுவடியை எடுத்துச் செல்லலாம் என உத்தரவிட, அதே இடத்தில் தான் கேட்டதின் சாராம்சத்தை எழுதி மன்னர்‌ முன்னிலையில் அன்னை சரஸ்வதியின் திருவடியில் ‌சமர்பித்தார் ராமானுஜர், உடனே திருக்கோவிலை பூட்டச்சொல்லி உத்தரவிட்டார் மன்னர்

மறுநாள் காலை சரஸ்வதி பீடத்திலுள்ள‌ அன்னை சரஸ்வதியின் ஆலயத்தை திறந்து பார்க்கும் பொழுது திருவடியில் இருந்த ராமானுஜரின் சுவடி அங்கு இல்லாது, அன்னையின் திருமுடியில் இருந்தது

உடனே மன்னர் அன்னையே ஏற்றுக்கொண்டாள், ஆகவே இந்த சூத்திர ஓலைச்சுவடிகளை உடையவரிடமே ஒப்படைக்க சொல்லி அவரின் திருவடியில் தண்டன் சமர்பித்தார்

ராமானுஜரும், கூரத்தாழ்வானும் மகிழ்ச்சியோடு அதை பெற்றுக்கொண்டு செல்ல, சரஸ்வதி பீடத்திலுள்ள பண்டிதர்கள்‌ ராமானுஜர்‌ எங்கே இதற்கு புதிய‌ உரை எழுதினால் தங்களுக்கு முக்யத்துவம் குறைந்து விடுமோ என எண்ணி சூத்திரத்தை ராமானுஜரிடமிருந்து அபகரிக்க திட்டம் தீட்டினார்

தங்களுடன் இருந்த ஒருவனை அவருடன் சிஷ்யனாக அனுப்பி சூத்திர‌ சுவடிகளை திருடி வரச்செய்தனர், பல மைல்கள் கடந்த பின்னரே ஓலைச்சுவடிகளை தாங்கள் இழந்தது அவர்களிவருக்கும் தெரிய வர மிகுந்த வருத்தமடைந்தார் உடையவர்

உடனே கூரத்தாழ்வான் சுவாமி கவலைப்படாதீரும் எனக்கூறி நான் எதையும் ஒருமுறை படித்ததுமே என் மனதில் பதிந்து விடும்‌ என்பதை தாங்கள் மறந்தீரோ, அந்த சூத்திரத்தை இங்கேயே அல்லது இரண்டு ஆற்றுக்கு நடுவில் (அதாவது ஸ்ரீரங்கத்தில்) கூறவா என கேட்க மிகுந்த சந்தோஷமடைந்த ராமானுஜர், தனக்கு எப்பேற்பட்ட சிஷ்யன் வாய்த்துள்ளான் என‌ எண்ணி‌ மிகுந்த சந்தோஷமடைந்தார்‌ பகவத் ராமானுஜர்

இருவரும் ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்த பின் கூரத்தாழ்வான் கூர பிரம்ம சுத்திரத்திற்கு வியாக்யாணம்‌ எழுதி‌ முடித்து தன் மானசீக குருவின் திருவரசில் ( சாமாது) வைத்து வழிபட்டு தான் மீண்டும் சொல்லச்சொல்ல கூரத்தாழ்வான் அதை ஓலைச்சுவடிகளில் எழுதினார்

ராமானுஜர் இயற்றிய கிரந்தங்களில் அந்த வியாக்யாணம் தான் மிக முக்கியமானதாக போற்றப்பட்ட ஸ்ரீ பாஷ்யம் என அழைக்கப்படுகிறது

ராமானுஜர்‌ மீண்டும் சில காரணங்களுக்காக காஷ்மீர் செல்ல வேண்டியிருந்தது, அப்பொழுது சாரதா (சரஸ்வதி ) பீடத்திற்கு‌ சென்று அன்னை சரஸ்வதி யின் திருவடியில் வைத்து வழிபட அன்னையே எழுந்து வந்து அந்த கிரந்தத்தை தன் சிரசில் வைத்து எடுத்து இந்த கிரந்தம் தவறே இல்லாது சுத்தமாயிருந்தது என தன் திருவாயால் மலர்ந்தார்

மேலும் அன்னை ராமானுஜரை தன் திருக்கரங்களால் அவரின் கரங்களை பிடித்து ஸ்ரீ பாஷ்யக்காரர் என திருநாமம் சூட்டி தான் வைத்து வழிபட்ட ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர்‌ விக்ரஹத்தை அவருக்கு தந்தருள, இதையெல்லாம் கேள்விப்பட்ட காஷ்மீர‌ மன்னர் ஸ்ரீநகருக்கு அவரை அழைத்து தங்க வைத்து அவருக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுத்து அவரின் சிஷ்யராக தன்னை இணைத்துக்கொண்டார்

அப்படி ராமானுஜர் வந்து தங்கிய அந்த புனித இடம் திருக்கோவிலாக மாற்றினார் மன்னர், காலப்போக்கில் அந்த பகுதி இசுலாமிய‌ கட்டுப்பாட்டில் செல்ல, திருக்கோவிலின் விக்ரஹங்கள் அடித்து நொறுக்கப்பட்டது

பா.ஜ.க ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் மீண்டும் ஆலயம் புதுப்பொலிவு பெற ஆரம்பித்தது, பக்தர்களும் தரிசனத்திற்காக வந்து செல்ல ஆரம்பிக்க பெங்களூரூவில் உள்ள யதிராஜ ஜூயர் ஸ்வாமிகள் உடையவருக்கு அங்கு மீண்டும் சிலா‌ ரூபத்தில் எழுந்தருள வேண்டும் ‌என்கின்ற அவரின் திருவுளப்படி மத்திய அரசும், காஷ்மீர் துணை நிலை ஆளுநரும் ஒத்துழைக்க உடையவரின் விக்ரஹம் தயாரானது

அந்த விக்ரஹத்தை தான் 07/07/2022 அன்று பாரத உள்துறை அமைச்சர் ஸ்ரீ அமித்ஷா அவர்கள்‌ முன்னிலையில் பக்தர்கள் வழிபாட்டிற்காக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது

இது தான் காஷ்மீரத்திற்கும், ராமானுஜருக்குமான உறவு

இதுதான் நமது பாரதம்‌ ஒரே பாரதம்‌ என்பதற்கான ஆதாரம்/உறவு

இந்த நிதழ்வைக்கண்ட காஷ்மீர‌ வாசிகள் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை

ஆனால் அன்னை சரஸ்வதியின் ஆட்கொண்டிருக்கும் பீடம் மிலேச்சர்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது, அதை‌ மீட்டு மீண்டும் ‌அங்கு சரஸ்வதி தேவி எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி‌ வழங்கிட சபதமேற்று அதற்கான பணிகளை‌ செய்வோம்

பிரம்ம தேவ நம:
அன்னை சரஸ்வதி திருவடிகளே சரணம்

ஸ்ரீ பாஷ்யக்காரர் திருவடிகளே சரணம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here