108 அடி உயர ஆதிசங்கரர் சிலை: நர்மதை நதிக்கரையில் திறப்பு

0
1332

108 அடி உயர ஆதிசங்கரர் சிலை: நர்மதை நதிக்கரையில் திறப்பு மத்திய பிரதேசம், ஓம்காரேஸ்வரரில், நர்மதை நதிக்கரையில், 108 அடி உயர ஆதிசங்கரர் சிலை திறப்பு விழா இன்று(செப்.,21) நடக்கிறது. கேரள மாநிலம், காலடியில் அவதரித்த ஆதிசங்கரர், தமது எட்டாவது வயதில், குருவை தேடி வீட்டை விட்டு வெளியேறி, நர்மதை நதிக்கரையில் இருந்த குகையில் தவம் செய்தார். அப்போது, கோவிந்த பகவத்பாதரை சந்தித்து, சன்னியாச தீட்ஷை பெற்றார்; நான்கு ஆண்டுகள் அவருடன் தங்கி, வேதாந்தத்தை கற்றுத்தேர்ந்தார். குருவின் வழிகாட்டுதலுடன், 12வது வயதில், வாரணாசி, பத்ரிநாத் சென்று பிரம்ம சூத்திரம், உபனிடதங்கள் மற்றும் பகவத்கீதை ஆகியவற்றுக்கு, ஆதிசங்கரர் உரை எழுதினார். ஆதி சங்கரரின் தெய்வீக பயணம், நர்மதை நதிக்கரையில் தான் துவங்கியது என்பதை நினைவுறுத்தும் வகையில், ஆதிசங்கரருக்கு நர்மதை நதிக்கரையில், 108 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஒருமைப்பாட்டின் சிலை’ என்ற அடையாளத்துடன்,ஆதிசங்கருக்கு, 108 அடி உயரத்தில் பல்வகை உலோகத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிருங்கேரி சிவகுமார் பண்டிட் தலைமையிலான வேத விற்பன்னர்கள், அதற்கான பூஜைகளை நிகழ்த்தி வருகின்றனர். சிருங்கேரி ஸ்ரீமடம் சார்பில், முதன்மை தலைமை அதிகாரி கவுரிசங்கர் விழாவில் பங்கேற்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here